in ,

கல்யாண மாற்றங்கள் (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அமெரிக்காவின் ஐந்தாவது மிகப் பெரிய நகரம் அட்லான்டானுநான் சொல்லி  உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சபேசன் குடும்பம் இங்கேதான் வசிக்கிறது.

சபேசன் முதல் முதல் 1982ல் இங்கே ஜார்ஜியா டெக்னிகல் யூனிவர்சிடியில் முதுகலை படிப்புக்காக வந்த போது அமெரிக்கா வருவது அவ்வளவு கஷ்டம் இல்லை. படிப்பில்  சிறந்த மாணவர்களுக்கு சுலபமாக யுனிவர்சிடிகளில் அட்மிஷன் கிடைத்தது.

உயர்கல்வி முடித்தவுடன், ஒரு பெரிய எலக்ட்ரிக் கம்பெனி சபேசனை வரிந்து கொண்டது. மிட்டவுனில் ஒரு சின்ன காண்டோ போதுமானதாக இருந்தது வேலைக்கு போய் வர.பெற்றோர்களின் நிர்ப்பந்தத்தால் நடுவில்  ஒரு முறை சிதம்பரம் (இந்தியாவில் சபேசன் பிறந்து வளர்ந்த ஊர்.) போய்  அமராவதியை கல்யாணம் பண்ணிண்டு வந்தான்.

பேருக்கேத்த மாதிரி  அமராமல் உழைக்கும் சுறுசுறுப்பான அதிரூப சுந்தரி அமராவதி. அப்படி ஒரு அழகும் அறிவும் பொருந்திய மனைவி அமைந்ததில் சபேசனுக்கு மிகப் பெருமை.

கல்யாணம் முடிந்து இரண்டே வருடங்களில் புறநகர் டுலூத்தில் ஒரு சவுகரியமான வீடு வாங்கினார் சபேசன். புது வீடு புகுந்த மூன்றாவது மாசத்தில் வீட்டின் லக்ஷ்மியாக ஒரு பெண் குழந்தை ஜனனம். என்ன பேர் வைப்பது என்பதில் போராட்டம்.

அமெரிக்காவில் படித்து வளரப்போகும் குழந்தைக்கு அமெரிகர்களின் பெயரை  ஒட்டி இருக்கணும்னு சபேசனுக்கு ஆசை. அமராவதிக்கோ தன் பாட்டி ஜானகி பேரை வைக்கணும்னு ஆசை. அதுதான் கடைசியில் நிறைவேறியது. சபேசன் ‘ஜேன்’ என செல்லமாக அழைத்து தன் ஆசையை பூர்த்தி செய்து கொண்டார்.

அந்த ஜேன் அமெரிக்க ஊட்டம், சூழ்நிலைக்கேற்ப அழகாக வளர்ந்தாள். அந்த வட்டாரத்துக்கே செல்லம்.“ஹை ஜேன் பேப் ஹவ் யூ டுடேனு” கேட்காமல்  போனவர்கள் அரிது. முதலில் புன்முறுவலால் தன் பிராம்ப்ஸ்ல இருந்து கவர்ந்த  அந்த சின்ன சிட்டு இப்ப ஃபென்ஸ் அருகே நின்று மழலைக் குரலில் ‘கிரேட்’னு  பதிலளிக்க ஆரம்பித்தது.

அட்லாண்டாவில் புகழ் வாய்ந்த ஶ்ரீசக்தி மந்திர் எனப்பட்ட அந்த ஹிந்து ஆலயம் இவர்கள் வீட்டிலிருந்து நடை தூரம். அமராவதி நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையை அள்ளி  பிராம்ப்ஸில் போட்டுக் கொண்டு அந்த கோவிலுக்கு போய் விடுவாள்.

வாடிக்கையாக  அங்கு வரும் பெண்கள் குழந்தையிடம் நின்று கொஞ்சம் கொஞ்சாமல் போகமாட்டார்கள். இப்படி அமெரிக்க வைரமாக வளர்ந்தாள் ஜானகி, ஒற்றைக் குழந்தைகளுக்கே உள்ள பிடிவாதமும் கூடவே வளர்ந்தது.

பள்ளிப் பருவத்தில், ஜானகின்ற ஜேனுக்கு நட்பு வட்டாரம் பெருகியது. 14 வயதில் பருவமடைந்த ஜேனைப் பற்றிய பயம்  அமராவதிக்கு இப்போதே ஆரம்பமானது.ஆனால் அவள் பயப்படும் அளவு ஆண் நண்பர்கள் யாரையும் வீட்டிற்கு கூட்டி வந்ததில்லை ஜானகி.

அமராவதி சபேசனை நச்சரிக்க ஆரம்பித்தாள். பெண்ணுக்கு 17, 18 வயசு ஆனவுடனேயே இந்தியா கூட்டிட்டு போய் நல்ல ஒரு தமிழ் பையனை இந்திய திருமண முறைப் படி கல்யாணம் தடபுடலாக பண்ணணும்,உறவினர்கள் நண்பர்கள்னு கூட்டம் வந்து கல்யாணத்துல கலந்துக்கணும்னு.

இப்ப வருஷம் 2024 நாம சொல்றபடியா இந்தக் கால குழந்தைகள் கல்யாணம்  பண்ணிக் கொள்ளும். அதிலும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும்,அமெரிக்க நாகரிகத்தில் வளர்ந்த ஜேன் கல்யாணம் என்ற பேச்சுக்கே இப்ப இடமில்லை, நான் நியூயார்க்  யுனிவர்சிடியில் டாக்டரேட் பண்ணப் போறேன்றா.

அமராவதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, 20 வயதைத் தாண்டும் குழந்தை தப்பான வழியில் போகக் கூடாதே என பயம். சபேசனிடம் புலம்பித் தீர்த்தாள்.

“இப்பல்லாம் உங்க பொண்ணு வீட்டுக்கு லேட்டா வரா, எங்கே போறா, வரானு ஒண்ணும் சொல்றதில்லை. எனக்கு பயமா இருக்கு எவனையாவது இந்த நாட்டுக்காரனை இழுத்துட்டு  வந்து இவனை கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லிட்டா என்ன பண்றது”

“இந்த பாரு அமர், இது நம்ம வளர்ந்த காலம் இல்லை, நல்லபடியா பேசிதான் குழந்தையை கன்ட்ரோல் பண்ணணும். இந்த ஞாயிற்றுக்கிழமை பைட்மாண்ட் பார்க் போற பிளான் இருக்கு, என் நண்பர் சுந்தரேசன் ஃபேமிலியும் வராங்க.அவங்க பையன் சிரேஷ்ட் ,பொண்ணு வித்யாவும் வராங்க. நம்ம ஜானகியும் வரேன்னு சொல்லி இருக்கா. அந்த சிரேஷ்ட் பிஸினஸ் மேனேஜ்மென்ட் பண்ணிட்டு பேங்க் ஆஃப் அமெரிகால வேலை பாக்கறான். பாக்கவும் நல்லாவே இருக்கான். நம்ம ஜானுவுக்கு பொருத்தமா இருப்பான். பேசட்டும் ரெண்டு பேருக்கும் பிடிச்சா இந்தியாவுக்கு  இந்த சம்மர்ல போய் கல்யாணம் வச்சிக்கலாம்.சரியா?”

அமராவதி ஞாயிற்றுக்கிழமையை ஆவலுடன் எதிர்பார்த்தாள். ஜானகிக்கும் அப்ப ஒரு மாற்றம் தேவை இருந்தது.அவளும் அதனால்தான் அப்பாவோட பிரண்ட் குடும்பத்தை பைட்மான்ட் பார்க்கில் சந்திக்க ஒப்புக் கொண்டாள்.

அந்த பரந்து விரிந்த பார்க்கில் ஒரு ஓபன் ரெஸ்டாரண்ட், பஞ்சாபியர் ஒருவரால் நடத்தப் பட்டு அமெரிக்கர்களையும், இங்கு வாழும் இந்தியர்களையும் கவரும் உணவு வகைகள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கே சபேசன் குடும்பம், சுந்தரேசன் குடும்பம்  இரண்டும் சந்தித்தது. அமராவதிக்கு அந்த குடும்பத்தை உடனடியாக பிடித்துப்  போனது. அதுவும் அந்தப் பையன் ஷ்ரேஷ்ட், பெண் ஸ்மிதா மிக மரியாதையாக பேசிய விதம் பிடித்தது.

ஷ்ரேஷ்ட் நம்ம ஜானுவுக்கு சரியான பொருத்தம் என மகிழ்ந்தாள். அதே நினைப்புதான் சுந்தரேசன் குடும்பத்துக்கும். ஸ்மிதா, அண்ணனின் காதில் “டேய் நீ லக்கிடா, அண்ணி சூப்பரா இருக்காங்க”

“போடி, இன்னும் நாங்க பேசக் கூட இல்லை அண்ணியாம் வெண்ணி”

ஜானகிக்கும் ஷ்ரேஷ்ட்,ஸ்மிதாவை பிடித்திருந்தது ஆனால் கல்யாண நோக்கில்  இந்த சந்திப்பு என்பது அவளுக்கு தெரியாது.கலகலப்பாக எல்லாருடனும் பேசினாள். 

அடுத்து கிளாரா மீர் லேக்ல போட்டிங் போகும் போது ஷ்ரேஷ்ட்,ஜானுவிடம்  “அடுத்த சண்டே நாம ரெண்டு பேர் மட்டும் பொடானிகல் கார்டன் அப்பறம் டின்னர் போலாமா?”

அவன் சொன்னது காதில் விழலையோ என்னவோ,ஜானு ஸ்மிதாவிடம் ஏதோ கல்லூரிக் கதைகளை உற்சாகமாய் பேசினாள்.  ஷ்ரேஷ்டுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். விட்டுப் பிடிப்போம் என அப்போது சும்மா இருந்து விட்டான்.

அன்று இரவு வீட்டுக்கு வந்தவுடன் சபேசன்,அமராவதி ஆர்வத்துடன் பெண்ணை  கேட்டார்கள்.”என்ன ஷ்ரேஷ்டை உனக்கு பிடிச்சிருக்கா மேற்கொண்டு  அவங்க கிட்ட பேசலாமா”

ஆச்சரியமாக அவர்களைப் பாத்த ஜானு,” கல்யாண நோக்கத்துலயா இன்றைய மீட்? சாரி மை டியர் பேரண்ட்ஸ் ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட்”

அமராவதிக்கும், சபேசனுக்கும் ஏமாற்றம்தான்.சபேசன், ”உன் மனசுல என்னதான்  இருக்கு, ஓபனா சொல்லேன் கல்யாணம் பண்ணிப்பயா மாட்டயா?”

ஒரு சின்ன சிரிப்புடன்,” டோன்ட் கெட் எக்சைட்டட் டாட் ,அடுத்த வாரம் லாஸ்ஏஞ்சலஸ்  போறேன் வந்து உங்களுக்கு சொல்றேன் குட்நைட் போத் ஆஃப் யு”சொல்லிட்டே  தன் அறைக்கு ஓடி விட்டாள்.

பல்வேறு கற்பனைகள்,பயத்துடன் சபேசனும்,அமராவதியும் தங்கள் அறைக்கு போனார்கள.

லாஸ்ஏன்ஜல்ஸ் விசிட்டுக்கு அப்பறம் சந்தோஷமாய் ஜானு திரும்பினாள்.

”மாம்,டாட் அட்லாஸ்ட் ஐ ஃபவுண்ட் மை பார்ட்னர்.நாங்க லிவிங் டுகேதரா  சில வருஷங்கள் இருப்போம் லாஸ்ஏன்ஜல்ஸ்ல”

அதிர்ந்து போன அமராவதியின் கல்யாணக் கோட்டைகள் கடற்கரை மண்  கோட்டையாய் கலைந்து விழுந்தது.சபேசன் அமெரிக்க வாழ்க்கையில் அதிகம் அடி பட்டதால் அதிர்ச்சி கொஞ்சம் கம்மி.

அமராவதி,” யாருடி பாவி அவன் என் குழந்தையை கெடுத்து குட்டிச்சுவராக்கினது?  இந்தியனா,இங்கே உள்ளவனா”

புன்சிரிப்புடன் நீயே பாரேன் இதோ என் லைப் பார்ட்னர், சொல்லும் போதே  ஹை ஃபோல்க்ஸ்னு உள்ளே வந்தது செக்கச் சிவந்த தலைமுடியுடன்  ஒரு நோஞ்சல் பிரென்ச் லுக் பெண்.

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பயமுறுத்தும் வருங்காலம் (சிறுகதை) – சுஶ்ரீ

    இந்த மண்ணின் தேவதைகள் (பகுதி 1) – சுஶ்ரீ