in ,

கைத்தலம் பற்ற (சிறுகதை) – ✍ சாய்ரேணு சங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ஏய், சிவப்பி! விளையாட வாடி!” என்று அழைத்தாள் தோழி.

“போடி! நான் நாராயணனோடுதான் விளையாடுவேன்” என்றாள் சிவப்பி.

“ஏனடி அப்படி?”

“நான் மீனவர் மகள். நீரில் விளையாடுவதே என் விருப்பம். நாராயணனும் நீரில் வாழ்பவன், அதனால்தான்” என்றாள் சிவப்பி.

“ஆமாம்! இவள் கூப்பிட்டால் நாராயணன் ஓடி வந்து விடுவான்” என்று அழகுகாட்டிவிட்டுப் போனாள் தோழி.

“ஸ்வாமி, எனக்கு ஏன் காட்சி கொடுக்க மறுக்கிறாய்? உன் கைப்பிடித்து விளையாட வேண்டும் என்று எனக்கு ஆவலாக உள்ளதே! நாரணன் வருக! தேவர் வருக!” அந்தப் பிஞ்சுக் குழந்தை தினந்தினம் மாலவனை வேண்டி அழுதது.

அந்த அழுகை வைகுண்டக் கதவைத் தட்டியது. திருமகளின் தாய்மனதை அசைத்தது. “ப்ரபோ! இந்தச் சிவப்பிக்குத் தாங்கள் அருள் செய்யக்கூடாதா? கள்ளங்கபடற்ற பிள்ளைமனம் அழைத்தும் நாரணன் மனம் கனியாதது ஏனோ?” என்று அறிதுயில் கொள்ளும் அரியைக் கேட்டாள் அலைமகள்.

“பார்கவீ! பல ஜன்மங்களாக அந்தப் பேதை சேர்த்த பாபங்கள் ஏராளம். அவை தீரவும் அச்சுதனான என்னைக் காணவும் இனிப் பல ஜன்மங்களாகுமே” என்றான் கேசவன்.

“அண்ணலே! இக்குழந்தை விடாது நாராயணா, நாராயணா என்று நாமஜபம் செய்கிறாள். அதனால் தீராத பாபங்களும் உண்டா? தாங்கள் கட்டாயம் அவள் ஆசைப்படிக் கைகொடுக்கவும் கைப்பிடிக்கவும் வேண்டும்” என்றாள் இலக்குமி.

“ப்ரியே! பாபங்கள் வெகுவிரைவில் தீர ஒருவருக்கு முக்கியமான பாக்கியம் ஒன்று கிடைக்க வேண்டும். அது இதுவரை இவளுக்குக் கிடைக்கவில்லை. அன்னையான உன் அருள்நோக்கம் கிடைத்து விட்டதால், அடுத்த பிறவியிலேயே அந்தப் பாக்கியத்தை அவள் பெறுவாள்” எண்று திருவாய் மலர்ந்தான் திருமால்.

காலம் ஓடியது. சிவப்பி மறுபிறவியெடுத்தாள். நீரிலாடுவதை மிகவும் விரும்பிய சிவப்பி நீரிலேயே பிறந்தாள். இப்பிறவியிலும் அவள் சிவப்பியாகவே இருந்தாள். ஆம், தென்பாண்டி நாட்டிலிருந்த ஒரு நீர்நிலையில் செந்தாமரையாகப் பிறந்திருந்தாள் சிவப்பி!

அந்தக் குளத்தில் நீரருந்த ஒரு யானைக் கூட்டம் வந்தது. அதன் தலைவனான கஜேந்திரனின் காலை ஒரு முதலை கவ்விக் கொண்டது.

கஜேந்திரன் தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடுவதைச் சிவப்பி பார்த்துக் கொண்டே இருந்தாள்.  தன் பலத்தால் விடுதலை பெற முயன்று தோற்றது. அதன்பின் தன் உறவினர்களால் தன்னைக் காக்க முடியுமோ என்று பார்த்தது, முடியவில்லை. தோல்வியடைந்த மற்ற யானைகள் கஜேந்திரனை விட்டு விலகிப் போய் விட்டன. கையறு நிலையில் கதறிற்று கஜேந்திரன்.

“இந்த முதலை யார்? மாயையா?” என்று எண்ணிச் சிரித்துக் கொண்டாள் சிவப்பி. கஜேந்திரனை எண்ணி வருத்தமும் பட்டாள்.

திடீரென்று கஜேந்திரன் தன் தும்பிக்கையை உயர்த்தியது. “நாராயணா! ஆதிமூலமே! அகிலகுரோ!” என்று அலறியது. சிவப்பி வியந்தாள்.

“தன்னை இந்த முதலைப் பிடியிலிருந்து விடுவிக்க முதற்பொருளால்தான் முடியும் என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டதே இந்த யானை!” என்று எண்ணினாள்.

காலம் கனிந்தது. வானில் மின்னல் போலும் கன்னல் போலும் காட்சி! கருடாரூடனாய் வந்தே விட்டான் மாதவன்!

ஒரே விநாடி! சக்ராயுதம் பாய்ந்தது. கஜேந்திரன் விடுதலை பெற்றான். “நாராயணா! நான் பேறு பெற்றேன்!” என்று பூரித்தான்.

துதிக்கையிலேயே கஜேந்திரனின் துதிக்கை வளைந்தது. தாமரைக் கொடியிலிருந்து சிவப்பி பறிக்கப்பட்டாள். தாமோதரனின் பாதம் சேர்ந்தாள்.

“லக்ஷ்மீ! உனக்குச் சந்தோஷமா? சிவப்பி அருள் பெற்றாள்” என்றான் நாரணன். அவன் கரத்தாமரையில் செந்தாமரை!

“அவள் பெற்ற பேறு என்ன ஸ்வாமி?” – கேட்டாள் திருமகள்.

“குருகடாக்ஷம். கஜேந்திரன் என்ற பரம பாகவதனால் நாராயண நாமம் உபதேசிக்கப் பெற்று ஸ்பரிச தீக்ஷையும் பெற்ற மறுவிநாடி அவள் பாபங்கள் தீர்ந்தன. பாதம் சேர்ந்தாள். அவள் விருப்பப்படியே அவளை நான் கைப்பிடித்தேன். இனி யுகயுகாந்திரமாய் அவள் என் கையிலேயே வசிப்பாள்” என்றான் வாசுதேவன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பசியும் ருசியும் (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    ருக்குமணி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு