in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 1) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அழகான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை. கோவை மாநகரம் பொலபொலவென விடிந்து கொண்டிருந்தது. எப்போதும் நிலவும் மிதமான சீதோஷணம் அன்றைய விடியலையும் அழகாக்கியது.

ஆங்காங்கே இருந்த டீக்கடைகள் காஃபியின் நறுமணத்தைத் தவழவிட்டபடி வாடிக்கையார்களை எதிர்நோக்கிக் காத்திக்கத் துவங்கின. அடர்த்தியாகக் கட்டிய மல்லி முல்லைச் சரங்களைப் பந்துபோல உருட்டி அகலமான கூடைகளில் அடுக்கி தங்கள் வியாபார மணத்தைப் பரப்பத் தயாராகினர் பூ விற்கும் பெண்மணிகள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சோம்பல் முறித்தபடி தூங்கிக் கொண்டிருக்காமல், வேலை நாட்கள் போலவே சுறுசுறுப்பாக விழித்துக் கொண்டு புத்துணர்வோடு இருப்பது கோவையின் கூடுதல் அழகு.

கோவை பீளமேடு பகுதியில் புதிதாக முளைத்திருந்த சில அடுக்குமாடிக் கட்டங்கள், அதன் நாகரிக வளர்ச்சியைப் பறைசாற்றி நின்றிருந்தன. ஆனாலும் அந்த அழகிய காலை நேரத்தில் அதிகம் பரபரப்பில்லாமல் அழகான அமைதியோடுதான் இருந்தது பீளமேடு.

அங்கிருந்த ஒரு வீட்டில் அமைதியைக் கிழித்துக் கொண்டு மொபைலில் அலாரம் ஒலித்தது.

“வழி நெடுக காட்டுமல்லி…..” என்ற பாடலை அலாரமாகப் பாடி ஆராதனாவின் தூக்கத்தைக் கலைத்தது அவளின் மொபைல்.

சோம்பல் முறித்தபடி மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்தி, மணியையும், கிழமையையும் பார்த்தாள். ஞாயிற்றுக்கிழமை 6 மணி.

‘ச்சே… 6 மணிதான் ஆகுதா? இன்னிக்கு ஒரு நாள்தான் நல்லாத் தூங்க முடியும். அலாரத்தை மாத்தி வச்சிருக்கணும்.’

தனியாகப் புலம்பியபடியே எழுந்தபோது, மேஜையின் மேலிருந்த கல்யாணப் பத்திரிகை ஆராதனாவை சுறுசுறுப்பாக்கியது.

‘அடடா… பூஜா கல்யாணத்துக்குக் கிளம்பணுமே….’

சுறுசுறுப்பாகப் பல்துலக்கி, சூடாக காஃபியைக் கையில் எடுத்துக் கொண்டு பால்கனியில் வந்து நின்றாள். இந்த அதிகாலையில் கோவை எவ்வளவு அழகாக இருக்கிறது!

ஒவ்வொரு விடியலும் மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. புதிதாய் ஏதோ ஒரு விஷயத்தை நமக்குக் கற்றுத் தருவதற்காகவே இருட்டைக் கிழித்துக் கொண்டு விடியல் வருவதாகத் தோன்றுகிறது. இதுபோன்ற சிந்தனைகள் எல்லாம் இப்போதுதான் அவளுக்கு  உதிக்கிறது.

இவ்வளவு வருடங்கள் இப்படிப் பொழுது புலரும் அழகையும், கதிரவன் மறையும் அந்தி மாலையையும், பஞ்சுப்பொதிகளான மேகக் கூட்டங்களையும், ஆகாயத்தில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களையும் இப்படி எதையுமே ரசித்ததில்லை. காலம் கடந்த ஞானோதயம் என்று இதைத்தான் சொல்வார்கள் போல.

பரவாயில்லை…. இந்த 32 வயதிலாவது ஞானம் பிறந்திருக்கிறதே என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு, ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழப் பழகிக் கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கையில் சில அடிகள் வாங்கிய பிறகுதான் சில தெளிவு பிறக்கும் போல. ஆனால் அந்த அடிகளை யோசித்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு நாளும் நகர்வதே கடினமாக உணர்வோம். அதனால் இப்போது ஒரு நாளின் ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வையும் கூட ரசிக்கப் பழகிக் கொண்டு விட்டாள் ஆராதனா.

ஆராதனா… அளவான உயரம் எடுப்பான நாசி களையான முகம். அதிகம் பருமனுமில்லை, அதிக ஒல்லியுமில்லை அளவான உடல்வாகு. வசீகரமான கண்களில் ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் மெல்லிய சோகம். நல்ல புத்திசாலி. இதுதான் ஆராதனா பற்றிய அறிமுகம்.

தோழியின் திருமணத்திற்குப் போகும் ஆவலோடு குளித்துமுடித்து வந்து, பீரோவில் புடவை தேடும் படலத்தில் இறங்கினாள் ஆராதனா. கைகள் ஒவ்வொன்றிலுமாக நகர்ந்து அவளுக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற டிசைனர் புடவையில் வந்து ஆவலோடு அள்ளிக் கொண்டது.

சேலைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு அளவான மேக்கப் போட்டு கண்ணாடி முன்னால் நின்று பார்த்தபோது அவளுக்கே அவளை மிகவும் பிடித்திருந்தது.

ஆராதனாவுடன் வேலை பார்க்கும் பூஜாவுக்கு இன்று சேஷாத்திரி மஹாலில் கல்யாணம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று பூஜா மிகவும் வற்புறுத்தி அழைத்திருந்தாள். அதற்குத்தான் இவ்வளவு காலையிலேயே எழுந்து கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.

பத்திரிக்கையைக் கையில் எடுத்தபோது பூஜா சொன்னது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது அவளுக்கு. இது காதல் திருமணமாம். கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வருவதாகச் சொன்னாள்.

ஏனோ சட்டென்று ஆராதனாவிற்கு அவளுடைய காதல்  நினைவுகள் மனதுக்குள் அலையடிக்க ஆரம்பித்தன. என்னதான் இவற்றை எல்லாம் யோசிக்கக் கூடாது என்று நினைத்து மனதை வேறு விஷயங்களில் திசை திருப்பினாலும், தினம்தினம் காதல் நினைவுகளும், கல்யாண நினைவுகளும் அவளுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நினைவுகள் இல்லாத நாட்களே இல்லை.

வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்தாள். அதிகம் சந்தடி இல்லாத காலை நேர பீளமேடு சாலை மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையைத் தந்தது. அது அவளின் காதல் நினைவுகளை இன்னும் அதிகமாகக் கிளறி விட்டது.

ஆட்டோவின் வேகத்திற்கு ஏற்ப முகத்தில் வந்து மோதிய தென்றல் போல, காதல் நினைவுகள் சிலிர்ப்பைத் தந்தன அவளுக்கு.

ஆராதனா கோவையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கியிருக்கும் ஒரு அபார்ட்மெண்டில், ஒரு பெட்ரூம் வீட்டில் வாடகைக்குத் தங்கியிருக்கிறாள். தனியாகத்தான் இருக்கிறாள். ஆராதனாவின் பெற்றோர் சென்னையில் இருக்கிறார்கள்.

காதல் நினைவுகளோடு ஆராதனா பயணித்துக் கொண்டிருக்கும் போதே, பூஜாவின் காதல் திருமணம்  ஆயுள்முழுவதும் அவளுக்கு நிலைத்து மகிழ்ச்சி தர வேண்டுமே என்ற கவலையும் எட்டிப்பார்த்தது.

எவ்வளவோ கனவுகளைக் சுமந்து மணமேடையில் கைகோர்க்கும் இந்தக் காதல் ஜோடிகள் போலத்தானே அன்று தன் கனவுகளும் மணமேடை ஏறியது. ஆனால் அது நிலைக்கவில்லையே.

நினைவலைகளில் நீந்தியபடியே கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தாள் ஆராதனா.

உடன் வேலை செய்யும் நண்பர்களைச் சந்திக்கும் ஆவலோடு ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.

நண்பர்களை மட்டுமா சந்திக்கப் போகிறாள்….???

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மாவுக்கான பரிசு (சிறுகதை) – மைதிலி ராமையா, சென்னை

    மாத்தி யோசி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை