in ,

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் ❤ (பகுதி 2) – சுஶ்ரீ

 2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

முத்து ஸ்டோருக்கு நேர் எதிர்ல, சக்தி ஆட்டோமபைல் ஸ்பேர் பார்ட் கடை. அதுக்கு பின்னாலதான் என் பால்ய நண்பன் விச்சுன்ற விஸ்வநாதன் குடியிருக்கற வீடு. ஞாயித்துக்கிழமை ஹனுமார் கோவில்லயும் வனஜாவை பாக்க முடியாத ஏமாத்துத்துல விச்சு வீட்டுக்கு மத்யானம் போனேன்.

நான் போறப்ப விச்சு தன் தங்கை பர்வதத்தோட ஏதோ சண்டை போட்டுண்டிருந்தான். நான் போனவுடனே பாருங்கண்ணா என் புக்கை பறிச்சிண்டு கொடுக்க மாட்டேன்றான் விச்சுன்னு என்கிட்ட முறையிட்டா.

நான், விச்சுவை பாக்க, அவன் பாருடா ஹெரால்ட் ராபின்ஸ் படிக்கற வயசா இது. அதான் பிடுங்கி வச்சேன். நான் பர்வதம் நீ ‘மில்ஸ் அன்ட் பூன்ஸ்’படிம்மா, ‘ஹெரால்ட் ராபின்ஸ்’ இப்ப வேண்டாம்னேன். அவ முகத்தை வக்கணை காட்டிட்டு உள்ளே போயிட்டா.

விச்சு என்ன ஆச்சு ஒரு மாதிரியா இருக்கேன்னான்

என் ஆப்த நண்பன் அவன், எலிமென்டரி ஸ்கூல்ல இருந்து ஒண்ணா படிச்சோம் அவன் அக்ரிகல்சர் காலேஜ், நான் அமெரிகன் காலேஜ். என் எல்லா விஷயமும் அவனுக்கு தெரியும். இந்த வனஜா விஷயம் மெதுவா சொன்னேன்.

அடப்பாவி, அந்த வனஜாவா அவ பர்வதத்தோட பிரண்ட்தாண்டா, எதுத்த ஸ்டோர்லதான் இருக்கா, கொஞ்சம் மா நிறம்தானே அவ்வளவு ஒண்ணும் அழகில்லையே.

எனக்கு கோபம் வந்தது, ஆனாலும் இவனால காரியம் ஆகும் போல இருக்கே கஷ்டப்பட்டு அடக்கிட்டு, எங்களுக்கு பிடிச்சிருக்குன்னேன்.

“எப்படியோ போ, ஆனா எனக்கு தெரிஞ்சவரை வனஜா நல்ல பொண்ணுதான், பெஸ்ட் ஆப் லக்”

“ஒரு வாரமா பாக்க முடியலை, என்னாச்சுனு கவலையா இருக்கு”, சொல்லி முடிக்கறதுக்குள்ளே, பர்வதம் பர்வதம்னு கூப்பிட்டுட்டே வனஜாவே உள்ளே வந்தா. என்னைப் பாத்து அவளுக்கும் திகைப்பு. தலையை குனிந்து கொண்டாள்.

“விச்சு அண்ணா பர்வதம் இல்லையா?”

“உள்ளேதான் இருக்கா போ, சரி என்ன ஒரு வாரமா கண்ல படல்லை எங்கயும் ஊருக்கு போயிருந்தயா?”

“ஆமாம்ண்ணா, என்னோட மேலூர் அத்தை இறந்துட்டாங்க அதுக்கு போயிருந்தோம்” சொல்லிட்டே என்னை கடைக் கண்ணால பாத்தா.

“மறந்துட்டேனே இது என் ஃபிரண்டு சீனு, அரசமர சந்துலதான் இருக்கான்.”

அழகா கையை குவிச்சா.

“சீனு, இது பர்வதம் ஃபிரண்ட், வனஜா, மீனாட்சி காலேஜ்ல படிக்கறா”

நான் ஒரு புன்னகை பூத்தேன். அவ உள்ளே போயிட்டா பர்வதத்தை பாக்க.எனக்கு பேச்சு வரலை.

விச்சு, “என்னடா இப்ப சந்தோஷமா? தனியா பேசணுமா? இரு ஏற்பாடு பண்ணறேன். இங்கயே உக்காரு”

பாரு, பாருனு உள்ளே போனான், விச்சு.

அடுத்த 2 நிமிஷத்தில் ஒரு சொம்புல தண்ணியோட வந்தது வனஜா, தண்ணி கேட்டீங்களாமேனு அந்த சொம்பை பக்கத்திலிருந்த ஸ்டூல்ல வச்சிட்டு, ஒயிலா மரக் கம்பத்துல சாஞ்சு நின்னா.

நான், ”ஒரு வாரமா தவிச்சிப் போயிட்டேன் தெரியுமா?”

“இங்க மட்டும் என்னவாம், திடீர்னு அத்தை செத்துப் போயிட்டா, உங்ககிட்ட சொல்ல வழியில்லை, ராத்திரியோட ராத்திரியா ஊருக்கு போயிட்டோம்” மெதுவா கிசுகிசுத்தாள்.

“சரி, நான் கோவில்ல சாயந்தரம் பாக்கறேன் பாருவோ, அவ அண்ணனோ வந்துடுவாங்க” உள்ளே போயிட்டா.

“என்னடா, இப்ப ஹேப்பியா? பேசிட்டயா?“ கேட்டுட்டே விச்சு வந்தான். நான் சந்தோஷமா அவனை கட்டிப் பிடிச்சேன்.

“விடுடா வனஜா பாத்தா கோச்சிப்பா”னு சொல்லி பக பகனு அவன் ஸ்டைல்ல சிரிச்சான்.

சாயந்தரம், “அம்மா நான் ஹனுமார் கோவில் வரை போயிட்டு வரேன்”

அம்மா, “என்னடா ஆச்சரியம், வரவர கோவிலுக்கெல்லாம் போறே, ஏதோ நல்ல ஸ்நேகிதம் இப்பதான் கிடைச்சிருக்கு போல இருக்கு”

“ஆமாம்மா ரொம்ப நல்ல ஸ்நேகிதம், எப்பவாவது உனக்கு தெரிஞ்சுதானே ஆகணும்”

“என்னவோப்பா வரவர பூடகமாவே பேசறே, விச்சுப் பயலை கேக்கறேன் என்னாச்சு என் பையனுக்குனு”

செருப்பை மாட்டிண்டு கோவிலுக்கு போனேன்.எனக்கு முன்னாலேயே வனஜா கோவில்ல. அங்கே உற்சவர் இருக்கற இடத்தை ஒட்டி பெரிய திண்ணை மாதிரி இடம் 3 அடி உயரத்துல. அதுல உக்காந்திருந்தா வனஜா, நானும் போய் பக்கத்துல (கொஞ்சம் தள்ளிதான்) உக்காந்தேன்.

மெதுவா கனைப்புடன் வனஜாவே பேச்சை ஆரம்பித்தாள்.

“முதல்ல என் நிலையை தெரிஞ்சிக்கோ. நாங்க மிடில் கிளாஸ்னு கூட சொல்ல முடியாத அதுக்கும் கீஈஈஈழே. அப்பா கார்பரேஷன் ஆபீஸ்ல கிளார்க், நாங்க 4 குழந்தைங்க, அக்கா, நானு, தங்கை, கடைக்குட்டி தம்பி.அப்பா மாச வருமானம் 10 நாள் தாங்காது. அம்மா அப்பளம் இட்டு ஏதோ இழுத்துப் பிடிக்கறா. அக்கா இப்ப கல்யாண வயசுல, மேலூர் அத்தை பையனுக்குதான் கொடுக்கற ஐடியா, கோவில்ல பண்ணினாலும் பத்தாயிரம் ரூபாவாவது வேணும். இந்த நிலைல நான் உன் கூட இப்படி. எனக்கு பயமா இருக்கு. அதுவுமில்லாம நாங்க கன்னட பிராமணாள், நீ தமிழ் பிராமின். என்ன ஆகுமோ பயமா இருக்கு. நீ என்னை ஏமாத்திட மாட்டயே?” மூச்சு விடாம பேசி நிறுத்தினா.

அவ கையை இறுகப் பிடிச்சிண்டேன், கீழே பிரகாரத்தை சுத்திண்டிருந்த ஒரு தாத்தா கண்ணாடியை இறக்கி எங்களை பாத்தார்.

பின்னால் வந்த ஒரு மாமிகிட்ட, “கலி முத்திடுத்து கோவில்னு கூட பாக்கறதில்லை, பசங்க களிசடையா போயிடுத்து இதெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையெழுத்து” எங்க காதுல கேக்கற மாதிரி பலமாவே பேசிண்டு நடந்தார்.

எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலை அதெல்லாம். வனஜாவை பாத்து, “என் படிப்பு இப்ப சீக்கிரம் முடிஞ்சிடும், பேங்க் ஆபீசர் எக்சாம் கொடுத்திருக்கேன்.அதிர்ஷ்டம் இருந்தா வேலை கிடைச்சிடும். அப்பறம் நானே செலவு பண்ணி உன்னை கல்யாணம் பண்ணிப்பேன், உன் அக்கா கல்யாணம் அதுக்குள்ளே ஆயிடும்தானே”

“ம், எல்லாம் நல்லா நடந்தா சந்தோஷம், உன்னை இனிமே என்னால மறக்க முடியாது”

இனிமே எப்படி கம்யூனிகேட் பண்ணிக் கொள்வது எல்லாம் ஒரு வழியா பேசி முடித்தோம்.

அடுத்து வந்த அந்த ஆறு மாதங்கள் எங்கள் வாழ்வின் இனிய தருணங்கள் நிறைந்தவை. மதுரைல நாங்க சேந்து போகாத இடமில்லை காந்தி மியூசியம், நாயக்கர் மஹால், மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் மலை, அழகர் கோவில் எல்லா இடமும் ஜோடியா ஆனா யாருக்கும் சந்தேகம் வராம சுத்தினோம். சின்ன சின்ன வரம்பு மீராத சில்மிஷங்கள், தொடுதல்கள்.

இப்ப என் டிகிரி பரிட்சை முடிந்தது, என் பாங்க் எக்சாமும் மிக நன்றாக எழுதி விட்டு, நேர்காணலுக்கு நிச்சயமாய் கூப்பிடுவார்கள் என காத்திருக்கிறேன். வனஜாவோட அக்கா கல்யாணமும் சீக்கிரம் கூடி வரும் போல இருந்தது.

விச்சுவுக்கு என் விஷயம் பூரா தெரியும். அன்னிக்கு அவன் வீட்டுக்கு போனப்ப அவனோட அம்மா கூட ஒரு கணவன் மனைவி பேசிண்டிருந்தா. விச்சு என் காதுல முணுமுணுத்தான், வனஜாவோட அப்பா, அம்மா, சரோ கல்யாணம் நிச்சயம் போல, கூப்பிட வந்திருக்கா, எதாவது உதவி கூட எதிர்பாக்கறா போல இருக்கு.

வனஜா கன்பர்ம பண்ணினா, பேருக்கு நிச்சயதார்த்தம் அடுத்த வெள்ளிக்கிழமையே கல்யாணம். திருப்பரங்குன்றத்துல தேவாங்கர் சத்திரம் 4 மணி நேரத்துக்கு இலவசமா கிடைச்சிருக்காம், உறவுலயே சமையல்காரர் இருக்கார் சல்லிசா பண்ணிக் கொடுக்க ஒத்துண்டிருக்கார்.

விச்சு ஃபேமிலியோட நானும் கல்யாணத்துக்கு போனேன், நாங்க சத்திரத்துக்கு போறப்ப ஒரே பரபரப்பு. சரோவை காணோம் உறவினர்கள்கிட்ட கசமுசா பேச்சு. வனஜாவோட அம்மா ஒரு பக்கம் அழுதுண்டு உக்காந்திருக்கா, வனஜா அவரை சமாதானம் பண்ணிண்டிருந்தா.

அவரோட அப்பா இடிந்து போய் உக்காந்திட்டார். மேலூர் அத்தையாம் அவங்கதான் அவரை ஆசுவாசப படுத்திண்டிருந்தா. அது அசத்து போனாப் போறது, இப்ப என்ன பண்ணணும் யோசி, சின்னவளை மணையில உக்கார வை நல்ல நாளை வீணாக்காதே.

அந்த பக்கம் நின்றிருந்த நானும் இதைக் கேட்டேன். வனஜாவை கட்டாயம் பண்ணி உக்கார வச்சிடுவாங்கனு பயம் வந்தது. நேரா வெளியே வந்தேன் 5ம் நம்பர் பஸ் பிடிச்சு வீடு வந்து விழுந்தவன்தான். 4 நாள் வெளியே வரலை, எங்க கையை மீறின விஷயங்கள் சரி பண்ண முடியலை. கனரா பேங்க்ல வேலை கிடைச்சது, விருத்தாசலத்துல போஸ்டிங். போங்க சார் என் மேல என்ன தப்புன்றீங்க இப்ப?

(அடுத்த பகுதி வரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் ❤ (பகுதி 1) – சுஶ்ரீ

    வீரமங்கை வேலுநாச்சியார் (புத்தக விமர்சனம்) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.