in ,

இரண்டாம் குலோத்துங்க சோழன் (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“என்ன கலெக்டர்? எங்கிட்டச் சொல்லவேயில்லை?” என்றார் எம்.எல்.ஏ இளங்கோ போனில்.

“எதைச் சொல்றீங்க சார்?” என்றார் நெல்லை கலெக்டர் ராம்குமார்.

“நீங்கதான் எழுத்தாளர் ராமானுஜன் என்ற விஷயத்தை! என் குடும்பமே உங்க ரசிகர்கள்யா! இந்த ஆண்டு ஞானபீடம் விருது உனக்குத்தான். இந்த விஷயம் தெரிய வந்தபோது, ஒரு பத்திரிகை எடிட்டர் கூட இருந்தார். அவர்தான் சொன்னார். வாழ்த்துகள்!”

“ரொம்ப நன்றி சார்” கலெக்டரின் குரலில் அத்தனை உற்சாகம் இல்லை.

“என்னய்யா? குரலில் சுரத்தே இல்லை? ஏதாவது பிரச்சனையா?” என்றார் இளங்கோ.

“ஒண்ணுமில்லை சார். என் தம்பி லக்ஷ்மண் லாஸ் ஏஞ்சலிஸில் இருந்து இங்கே வரணும். தங்கை உமா மும்பையில் இருக்கா. அவளுக்கும் கிளியரன்ஸ் வேணும் இங்கே வர. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ…”

“கோவிட் டெஸ்ட் மட்டும் எடுத்துடச் சொல்லு. மற்றபடி நான் க்ளியரன்ஸ் வாங்கித் தரேன். என்ன விஷயமா வராங்க?” கேட்பதற்கு இளங்கோவுக்குத் தயக்கமிருந்தது. இந்தக் கேள்விக்கு யார் நல்ல பதிலைச் சொல்கிறார்கள் இந்நாட்களில்?

“அப்பாவைப் பார்க்க வராங்க…”

“சரி” என்றார் இளங்கோ அவசரமாய். “உன் அப்பா… எங்கே…”

“இங்கே அரசு மருத்துவமனையில்… வெண்டிலேட்டரில்…”

“பாவமே! ஒரு தடவை பார்த்திருக்கேன். என்ன கம்பீரமாய் இருப்பார்!”

“ஆமா சார்” ராம்குமார் புன்னகைத்தார். “அவரை இரண்டாம் குலோத்துங்க சோழன்னே நாங்கள்ளாம் சொல்வோம்…”

“எதற்கு அப்படி ஒரு பெயர்?”  இளங்கோ சிரித்தார்.

“ரொம்ப ஸ்ட்ரிக்ட் தெரியுமோ அவர்? நாங்க மூணு பேரும் படிப்பைத் தவிர வேறு எந்த ஆக்டிவிட்டிலயும் ஈடுபடக்கூடாது. அப்படி மீறி ஈடுபட்டா, பெல்ட் பிஞ்சுடும். ‘அந்தக் காலத்திலே நான் பிச்சையெடுத்துக் காலேஜ் ஃபீஸ் கட்டினேன். உங்களுக்கெல்லாம் படிக்க முடியுங்கறபோது, படிப்பைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் போச்சு… கண்ணை நோண்டிடுவேன்’ என்று மிரட்டுவார்” ராம்குமார் பழைய நினைவுகளில் லயித்தார்.

“எனக்குப் படிக்கறதிலும் எழுத்திலும் ரொம்ப ஆசை. ஒரு சமயம் ஃப்ரெண்டிடம் இருந்து ஆசையா பொன்னியின் செல்வன் புத்தகம் வாங்கிக்கிட்டு வீட்டுக்குள்ள நுழையறேன், அப்பா பார்த்துட்டார். ‘பாடப் புஸ்தகத்தைத் தவிர வேற ஒண்ணைத் தொடுவியா, தொடுவியா’ன்னு அந்தப் புத்தகத்தாலேயே என்னை அரைமணி நேரம் அடிச்சிருக்கார்… உமா ஒருநாள் டான்ஸ் க்ளாஸ் போனதுக்குக் காலிலே சூடு வெச்சார்… தம்பி சினிமா பார்க்கறான்னுட்டு…”

இளங்கோவுக்குப் பெயர்க்காரணம் புரிபட ஆரம்பித்தது.

“அம்மா… அவள்தான் கூரத்தாழ்வான் மாதிரி நடுவில் நின்று எங்களைத் தப்பிக்க வைத்தாள். என்னை ஹாஸ்டலில் சேர்த்தாள். தம்பியை மாமா வீட்டுக்கு அனுப்பினாள். உமாவைப் படிப்பு முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாள். என் அரசுப்பணியைத் தவிர, நான் எழுத ஆரம்பித்தேன். தம்பி இஞ்சினியர், ஹாலிவுட் ஸ்டூடியோஸ்ல அனிமேஷன்ல இருக்கான், இயக்குனராகவும் இருக்கான். உமா டான்ஸ் ஸ்கூல் வெச்சிருக்கா…”

“நம்ம சித்தாந்தம் நல்லதுங்கறதுக்காக, மற்ற சித்தாந்தங்கள் மீது வெறுப்பு இருக்கலாமா? அவை அடக்க, அடக்க, வேறிடத்தில் வேர்கொண்டு வளருமில்லையா?  அப்பா கடைசி மூச்சை விடறதுக்குள்ளே, நாங்க அவரிடம் மறைச்சு வெச்சிருக்கற எங்க வளர்ச்சியைச் சொல்லணும். அவர் மனசுமாறி எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணணும். அது ஞானபீடத்தைவிடப் பெரிசு” என்றார் ராம்குமார்.

மூன்று நாட்கள் கழிந்தன. ராம்குமார் இளங்கோவைத் தொலைபேசியில் அழைத்தார். “அப்பா காலம் ஆயிடுச்சு” என்றார்.

இளங்கோ, “அடடா! மனசைத் தேத்திக்குங்க. உங்களிடமெல்லாம் அவர் கடைசியா என்ன பேசினார்?” என்றார்.

“எங்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்து சிரிச்சார். நர்ஸ்கிட்ட பெருமையா காட்டினார். பிள்ளைங்களை நல்லா படிக்க வைங்கன்னு திணறிட்டே சொன்னார்… மூச்சு அடங்கிடுச்சு.”

இந்த இரண்டாம் குலோத்துங்கன் கடைசிவரை தன் கம்பீரத்தை இழக்கவில்லை என்று எண்ணிக் கொண்டார் இளங்கோ.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 3) – கவிஞர் இரஜகை நிலவன்

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை