in ,

இறைவன் என்னும் இயக்குனர் (சிறுகதை) – முகில் தினகரன்

Indian mature woman looking upset, despondent after having fight with her husband standing in background on rooftop at day time.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

      ஜி.எம். அறைக் கதவை லேசாய்த் திறந்து,   “மே ஐ கம் இன் சார்?” நாசுக்காய்க் கேட்டாள் ஸ்டெனோ மைதிலி.

       “யெஸ்” உள்ளே அனுமதித்த ஜி. எம். ரஞ்சித், அவளிடம் அந்தக் கடிதத்தை நீட்டி,  “ரொம்ப முக்கியமான கடிதம்!.. இன்னைக்கே கூரியர் தபால்ல அனுப்பிச்சிடு” என்றார்.

       அதை வாங்கிக் கொண்டு திரும்பியவளை,  “ஒரு நிமிஷம் மைதிலி” என்று சொல்லி அவர் நிறுத்த, நெற்றியைச் சுருக்கி கொண்டு அவள் பார்க்க, “உன் தம்பி வேலையில்லாமல் இருக்கான்”னு சொல்லிட்டிருந்தியே?… என்ன ஆச்சு?…. ஏதாவது வேலை கிடைச்சுதா?”

      “இன்னமும் தேடிக்கிட்டுத்தான் இருக்கான் சார்” சொல்லும் போது மைதிலி முகத்தில் சோகம்.

      “நம்ம பிரான்ச் ஆபீஸ்ல ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை காலியா இருக்கு… கம்ப்யூட்டர் தெரியுமல்ல அவனுக்கு?”

      “ம்… தெரியும் சார்!… படிச்சிருக்கான்!… சார்…. நீங்க நினைச்சா அந்த வேலையை என் தம்பிக்கு வாங்கித் தர முடியும்!… ப்ளீஸ்… ஹெல்ப் பண்ணுங்க சார்”

      “தாராளமாய்ப் பண்ணலாம்!…  பதிலுக்கு நீ எனக்கு என்ன கொடுக்கப் போற?”

      முகத்தில் கேள்விக்குறியோடு,  “சார்… நான்… உங்களுக்கு… என்ன… கொடுக்க முடியும்?” தெளிவான குரலில் கேட்ட மைதிலியிடம்,

            “என் மிசஸ் ஏதோ கோயில் குளம்ன்னு ரெண்டு நாள் டூர் போயிருக்கா… இன்னிக்கு நைட் நான் தனியா… ஃப்ரீயா இருப்பேன்… நீ வந்து எனக்கு கம்பெனி குடுக்கணும்” சொல்லி விட்டு அசிங்கமாய்ச் சிரித்தார் அந்த ஜி.எம்.

            “ஹக்”…கென்று அதிர்ந்தாள்.

      “பயப்படாதே!… உன்னையும்… என்னையும் தவிர இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது” இளித்துக் கொண்டு சொன்னவரை எரித்து விடுவது போல் பார்த்து, பற்களைக் கடித்தபடி வெளியேறினாள் மைதிலி.

      இருக்கைக்கு வந்து அமர்ந்த பின்னும் அவளுக்குள் அந்த படபடப்பு அடங்காமலே இருந்தது.  விடுமுறை போட்டு விட்டு போய் விடலாமா? என்று கூட நினைத்தாள்.  

“ச்சை!… இவனெல்லாம் என்ன மனுஷன்? வெளித்தோற்றத்தில் மட்டும்தான் நாகரிகம்!… உள்ளுக்குள்ளார அத்தனையும் வக்கிரம்!… ஒரு பொண்ணு தன்னோட பொருளாதாரச் சூழ்நிலையால் வேலைக்கு வந்துட்டா… அவ எல்லாத்துக்குமே தயாராகிடுவாள்!ன்னு நினைக்கிற ஆண் வர்க்கம் எப்போது திருந்தும் இறைவா?” இயலாமையின் எல்லையாய் இறைவனிடம் தஞ்சம் புகுந்தாள்.

      அடுத்த வாரத்தில் ஒரு நாள், ஐந்து நட்சத்திர ஓட்டலின், அரை இருட்டு பாரில், வெளிநாட்டு நிறுவனமொன்றின் மும்பைப் பிரதிநிதியுடன் மதுவை சுவைத்துக் கொண்டிருந்தார் ஜி.எம். ரஞ்சித்.

      அந்த மும்பைப் பிரதிநிதி மட்டும் தான் சமர்ப்பிக்கப் போகும் அறிக்கையில்  “ஓ.கே” என்று கையெழுத்திட்டு சிபாரிசு செய்து விட்டால் வெளிநாட்டு நிறுவனத்தின் முப்பது கோடி ரூபாய் ஆர்டர் இவர்களுக்குத்தான்!.. அதில் ஜி.எம்.மிற்கு தனியாக ரிவார்டும் உண்டு லட்சக்கணக்கில்.

      அதற்காகத்தான் அந்த மும்பைக்காரனை எந்தெந்த வகையிலெல்லாம் குளிர்விக்க முடியுமோ?.. அந்தந்த வகையிலெல்லாம் குளிர்வித்துக் கொண்டிருந்தார் ரஞ்சித்.

      அளவுக்கு மீறிய போதையில் இருந்த அந்த ஆள்,  “மிஸ்டர் ரஞ்சித்!… என்க்கு லட்கி வேணும்!… ராத்திரிக்கு கம்பெனி வேணும்” குழறலாய்க் கேட்க,

       முகச்சுளிப்புடன் யோசித்த ரஞ்சித்,  “நோ ப்ராப்ளம்!… அதுக்கு இங்கேயே ஆளு இருக்காங்க!.. நானே ஏற்பாடு பண்றேன்” என்றார்.

      “ப்ரோ… எனக்கு அந்தப் பெண்தான் வேண்டும்!…நேத்திக்கு உன் கூட ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பார்த்தேனே… அந்தப் பொண்ணு”

      அதிர்ந்து போனார் ரஞ்சித். “சாப்… அவ என் மனைவி… மை வைஃப்”

.
     “ஸோ வாட்?… ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லுங்க!…முப்பது கோடி ரூபாய் ஆர்டர் உங்களுக்கு வேண்டாமா?”.

      வாயடைத்து சிலையாய்ச் சமைந்து போன ரஞ்சித்தை உலுக்கி,  “கவலைப்படாத மேன்!… இது யாருக்கும் தெரியாது… உனக்கும்… எனக்கும் மட்டும் தான் தெரியும்”.

      அந்தப் பேச்சை மாற்றும் விதமாய்  “ஷாப் நீங்க ஏற்கனவே அதிக போதையில் இருக்கீங்க!… அதனால வாங்க ரூமுக்குப் போகலாம்!”

      “ஹேய்… மேன்…. எனக்கு அந்தப் பெண்ணை ஏற்பாடு பண்றேன்னு சொல்லு!… அப்பத்தான் ரூமுக்கு வருவேன்” அவன் அடம்பிடிக்க, அங்கிருந்த பேரரின் உதவியுடன் அவனை தள்ளிக் கொண்டு சென்று,  அறையில் படுக்க வைத்து விட்டு கனமான நெஞ்சுடன் வீடு திரும்பினார் ரஞ்சித்.

      “ராஸ்கல்!… என்னோட மனைவி வேணுமாம் இவனுக்கு?… ஸ்டுப்பிட்… அந்த முப்பது கோடி ஆர்டரை ஓ.கே. செய்யும் அதிகாரம் இவன் கையில இருக்குது என்பதற்காக… எதை வேணாலும் கேட்கலாமா?..” கோபத்தில் கண்கள் கனல் கங்குகளாகின.

      அன்று இரவு ரஞ்சித் தூக்கத்தைத் தொலைத்தார். அந்த மும்பைப் பிரதிநிதி பேசிய பேச்சுக்களே திரும்பத் திரும்ப  மனதுக்குள் வந்து போக, இனம் புரியாத ஒரு சோகத்தை அனுபவித்தார்.  

      புரண்டு புரண்டு படுத்தவர் மனதில் ஏனோ மைதிலி நினைவு வர, யோசிக்க ஆரம்பித்தார்.   “கடவுளே… என்னை மன்னிச்சிடு… என் தப்பை நான் உணர்ந்திட்டேன்!… அவ தம்பிக்கு வேலை கொடுக்கிற அதிகாரம் என் கையில் இருந்ததினாலே நான் அவகிட்ட அவளையே கேட்டேன்!… அதுக்கு பதிலடி கொடுக்கவா இப்படி ஒரு ஆளை அனுப்பிச்சே?”.

      மறுநாள்.  மைதிலியை வலிய அழைத்து,  “உன்னோட தம்பியை உடனே நம்ம பிரான்ச் ஆபிசுக்கு போய் அங்கு கம்ப்யூட்டர் பிரிவு மேனேஜர் சூரியநாராயணனைப் பார்க்கச் சொல்லும்மா… நான் ஏற்கனவே போன்ல சொல்லிட்டேன்!… போன உடனேயே வேலைக்கான உத்தரவை கொடுத்திடுவாங்க!” என்றார் ரஞ்சித்.

      “இல்ல சார்!… வேண்டாம் சார்!… நான் என்னையே விலையாக் கொடுத்து அந்த வேலையை வாங்க விரும்பலை சார்” என்றாள் மைதிலி எங்கோ பார்த்தபடி.

      “என்னை மன்னிச்சிடும்மா!… நான் கேட்டதையெல்லாம் மறந்திடு!…  அந்த நிமிஷத்துல எனக்குள்ளார ஒரு சைத்தான் புகுந்து அப்படியெல்லாம் கேட்க வெச்சிடுச்சு!…. இப்ப… இப்ப அது போயிட்டுது!… நானும் என் தப்பை உணர்ந்துட்டேன்மா.” தழுதழுத்த குரலில் அவர் சொல்ல,

            மைதிலி அவரை நம்பாமல் பார்க்க, “ஆண்டவன்னு ஒருத்தன் நம்ம எல்லோரையும் பார்த்திட்டுத்தான் இருக்கான்…. நாம் செய்யற தப்பையெல்லாம் கவனிச்சிட்டுத்தான் இருக்கான்… என்கிற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் இருந்திட்டேன்!… இப்ப புரிஞ்சுகிட்டேன்!… அதை மட்டும் இல்லை… நம்ம தப்புக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பான் என்பதையும் தெளிவாய்ப் புரிஞ்சுகிட்டேன்”.

      தன்னைவிட வயதில் மூத்தவரான அவர் தன்னிடம் அழாக்குறையாய்க் கெஞ்சுவதைக் கண்டு மனம் இறங்கிய மைதிலி,  “ஓ.கே. சார்!… நீங்க உணர்ந்திட்டீங்கல்ல?… அதுவே போதும்!” அவள் வெளியேறப் போக,

            “அப்ப… தம்பியை இன்னைக்கே வேலையில் சேர்ந்திடச் சொல்லிடும்மா ” என்றார்.

“நாளைக்கு நல்ல நாள்!… பிரதோஷம்!… அதனால… நாளைக்குப் போக சொல்லிடுறேன் சார்”

அவள் வெளியேறிய ஐந்தாம் நிமிடம் தொலைபேசி ஒலிக்க எடுத்து,  “யெஸ் ரஞ்சித்  ஹியர்” என்றார்.

      அந்த மும்பைப் பிரதிநிதி. அவனுடன் பேசவே எரிச்சலாய் இருந்தது ரஞ்சித்திற்கு.  ஆனாலும் உத்தியோகம் நிமித்தம் பேசித்தான் தீர வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு உட்பட்டு,  “ம்…சொல்லுங்க சாப்” என்றார் எரிச்சலுடன் .

“மிஸ்டர் ரஞ்சித்! என்னை மன்னிச்சிடுங்க! நேத்திக்கு போதையில் நான் உங்ககிட்ட என்னென்னவோ… கேட்கக்  கூடாததையெல்லாம் கேட்டுட்டேன்!… போதை தெளிஞ்சதும் யோசித்துப் பார்த்த பிறகுதான் என்னோட தப்பு எனக்கு உறைத்தது!… ஸாரி!… நீங்க ரொம்ப நல்லவர்… நான் அப்படிக் கேட்டும் கூட என் மேல் கோபப்படாமல் என்னை பத்திரமாய்க் கொண்டு போய் ரூம்ல சேர்த்திருக்கீங்க!… ஆனா நான்…?… ப்ளடி ராஸ்கல்… ஆர்டரை ஒப்புதல் செய்யற அதிகாரத்தைக் கையில வச்சுக்கிட்டு எத்தனை மோசமா உங்ககிட்ட நடந்துக்கிட்டேன்!… என்னை நினைத்து நானே வெட்கப்படறேன்!..”

 “இட்ஸ் ஓ.கே. சாப்”

 “மிஸ்டர் ரஞ்சித்!… நான் மும்பை புறப்படறேன்!… 10:30-க்கு ஃபிளைட்!… பை… பை..”

 அப்போது கதவை திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்த ப்யூன்  நீட்டிய கவரை வாங்கி பிரித்தார் ரஞ்சித். உள்ளே  “ஓ.கே” என்று அந்த மும்பைப் பிரதிநிதி கையெழுத்திட்ட இவர்கள் நிறுவனத்திற்கான சிபாரிசு அறிக்கை.

 ரஞ்சித்திற்கு எல்லாமே வியப்பாக இருந்தது.

அதே நேரம் குழப்பமாகவும் இருந்தது.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இனக் கேடர் | இடாலோ கால்வினோ (மொழிமாற்றச் சிறுகதை) – பாண்டியன் புதுக்கோட்டை

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 11) – சுஶ்ரீ