எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மாலை நேரக் கடற்கரை.
“ஓ.கே. ரகு நான் கிளம்பறேன் மணி ஆறே முக்காலாயிடுச்சு… வானம் வேற லேசா இருட்டிடுச்சு…. இதுக்கு மேலே லேட்டாப் போனா… ஹாஸ்டல் வார்டன் கண்டபடி எகிறும்!” மணலில் இருந்து எழுந்த ராதா பின்பக்கம் ஒட்டி இருந்த பீச் மணலை தட்டியபடி, தனியே கழற்றி வைத்திருந்த தன் ஹைஹீல்ஸ் செருப்புகளை அணிந்தாள். அவளின் ஒரு கையை பற்றிய படி எழுந்தான் ரகு.
“யார்?… அந்த குண்டு பூசணி வார்டனா?” கேட்டான்.
“ஆமாம்…. அதேதான்!… ரொம்ப ஸ்ட்ரிக்ட்!… வெளியவே விடாது… அப்படியே விட்டாலும் ஏழு மணிக்குள்ளார கண்டிப்பா வந்துடணும்!… இல்லேன்னா அவ்வளவுதான்!… சத்தம் போட்டு மானத்தையே வாங்கிடும்!… மத்த ரூம்ல எல்லாப் பொண்ணுங்களும் பார்த்து ரசிப்பாங்க!…” மணிக்கட்டை உயர்த்து வாட்சைப் பார்த்தவள், “ஐயோ… போச்சு… இன்னைக்கு எனக்கு நல்ல அபிஷேகம் தான்!”.கையை உதறிக் கொண்டு சொன்னாள் ராதா.
“அடப் போ!… அவ கெடக்குறா!… ரொம்பப் பேசினான்னா… “சும்மா நிறுத்துடி!”ன்னு சொல்லிடு!”. என்றான் ரகு.
“சிட்டில இருக்கற வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலிலேயே நல்ல டீஸண்டான ஹாஸ்டல் இதுதான்!.. நல்ல பாதுகாப்பு… நல்ல வசதிகள்!… இந்த ஹாஸ்டல்ல ரூம் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?… பவர்ஃபுல் ரெக்கமண்டேஷன் வேணும்!… நானே பெரிய ரெக்கமண்டேஷன்லதான் இடம் புடிச்சேன்!… எப்ப ரூம் காலியாகும் உள்ளார பூந்திடலாம்னு… கியூ வரிசையில் காத்திட்டிருக்காங்க தெரியுமா?”.
“சரி… போதும்… போதும்… போகலாம் வா!” ரகு முன்னே நடந்து சென்று தன் ஹீரோ ஹோண்டாவை உதைக்க ஓடிப் போய் பின்னால் ஏறி அமர்ந்து அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டாள் ராதா.
“ஆமாம் இப்பவே மணி ஏழாயிடுச்சு… நீ போய்ச் சேரும் போது ஏழு முப்பதாயிடும்… என்ன சொல்லிச் சமாளிக்க போறே?” வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ரகு சத்தம் போட்டு பேசினான்.
“வழக்கம் போல ஏதாச்சு ரீல் விட்டுட வேண்டியதுதான்!” பதிலுக்கு ராதாவும் சத்தம் போட்டு கத்தினாள்.
“இன்னைக்கு என்ன ரீல் தயார் பண்ணி வெச்சிருக்கே?”.
“எங்க அப்பா பெரிய பிசினஸ்மேன்… மாசத்துல ரெண்டு மூணு நாள் வீடு தங்கினாலே அதிசயம்…. பாம்பே, டில்லின்னு பறந்துட்டே இருக்கிறவரு!”.
“சரி… அதுக்கென்ன இப்போ?”.
“சொல்றத முழுசாக் கேளுடா முள்ளங்கி மூக்கா!… எப்பவாவது ஒரு தடவை இந்த ஊருக்கு வருவாரு… அப்படி வரும் போது என்னைய ஆபீஸ்ல வந்து மீட் பண்ணுவாரு!… நானும் லீவு போட்டுட்டு அவரோட வெளியே கிளம்புவேன்!… அவரோட பிசினஸ் பிரண்ட்ஸ்க வீடு இந்த ஊர்ல ரெண்டு மூணு இருக்கு!… அங்க போவோம்… நைட் டிபன் எல்லாம் முடிச்சுட்டு… ஹாஸ்டலுக்கு வருவோம்… சில சமயம் உள்ளார வந்து வார்டன்கிட்டப் பேசிட்டு என்னை விட்டுட்டு போவாரு!… சில சமயம் அப்படியே வெளியிலேயே இறக்கி விட்டுட்டு போயிடுவாரு!… இன்னைக்கு என்ன சொல்லுவேன்னா?… அப்படியே வெளியில இறக்கி விட்டுட்டு போயிட்டாருன்னு ரீல் விட்டுடுவேன்”.
“யப்பா… சரியான கில்லாடி இருப்ப போலிருக்கே?”.
“பின்னே?… அப்படி இல்லாமலா உன்னை வளைச்சுப் போட்டிருக்கேன்?” என்றபடி அவன் பிடரி முடியைப் பிடித்து இழுத்தாள்.
“ஏய்… ஏய்… வண்டியில போகும் போது தொந்தரவு பண்ணாத!… அப்புறம் ரெண்டு பேரும் ரோட்டுல அங்கப் பிரதட்சணம் பண்ண வேண்டியதுதான்!”.
ஹாஸ்டல் வந்து விட, காம்பவுண்டுக்கு வெளியே ஒரு நூறு அடி தள்ளி பைக்கை நிறுத்தி அவளை இறக்கி விட்டான்.
“ஓ.கே. ஸீ யூ டா!” என்று கூறியபடி ஃப்ளையிங் கிஸ் ஒன்றை காற்றில் பறக்க விட்டவாறே ஹாஸ்டல் நோக்கி ஓடினாள் ராதா. அவள் விட்ட ஃபிளையிங் கிஸ்ஸைக் கையில் பிடித்து சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்ட ரகு பைக்கைத் திருப்பினான்.
“வாம்மா மகாராணி!… மணி எவ்வளவு தெரியுமா?” இடுப்பில் கையை வைத்துக் கொண்டு எரிக்கும் விழிகளுடன் நின்று கொண்டிருந்த ஹாஸ்டல் வார்டன் மேடம் அவளை கிண்டலாக வரவேற்றாள்.
மற்ற அறையைச் சேர்ந்த அத்தனை பெண்களும் அங்கே ஒன்றாகக் கூடி நின்று கொண்டிருந்தது ராதாவிற்கு சற்று நெருடலாக இருந்தது.
“மேடம்… மணி ஏழேகால் ஆயிடுச்சு தெரியும்!… அப்பவும் நான் டாடி கிட்ட சொன்னேன்… “வேண்டாம் டாடி ரிலேட்டிஸ் வீட்டுக்கு நெக்ஸ்ட் டைம் போய்க்கலாம்… லேட்டானா வார்டன் மேடம் திட்டுவாங்க!”ன்னு டாடிதான் “நான் சொன்னேன்னு சொல்லும்மா… திட்ட மாட்டாங்க!”ன்னு சொன்னார். சரளமாக பொய் மூட்டையை அவிழ்த்து விட்டாள் ராதா.
தலையை மேலும் கீழும் ஆட்டிய வார்டன், “அப்படியா இப்ப யாரு கூட வந்தே?. கேட்டாள்.
“டாடி கூடத்தான் கார்ல ரெண்டு பேரும் வந்தோம்… என்னையை இறக்கி விட்டுட்டு… இப்பத்தான் கிளம்பினார்… ஏதோ அவசர வேலையாம் இன்னொரு நாள் உள்ளார வர்றேன்னுட்டுப் போனார்!” அடுத்த பொய்யை எடுத்து விட்டாள்.
“நெஜமாத்தான் சொல்றியா?… இல்லை…” தலையை சாய்த்துக் கொண்டு வார்டன் சந்தேகமாய் கேட்க.
“மேடம் கொஞ்சம் இருங்க மேடம்… கார் நம்ம தெருவை விட்டு திரும்பிக் கூட இருக்காது… நான் சத்தம் போட்டு நிறுத்தி டாடியையே வந்து சொல்லச் சொல்றேன்!”. என்றவள் அவசர அவசரமாக வெளியே வந்து தெருவில் தேடுபவள் போல் பாவலா செய்து விட்டு
“அடடே… கார் தெருமுனை தாண்டிடுச்சே!” என்றபடி உள்ளே வந்தாள்.
அங்கே கூடியிருந்த அத்தனை பெண்களும் அவள் செய்கையை வினோதமாக பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தனர்.
தன் மொபைலை எடுத்து ஏதோவொரு நெம்பரை அழுத்திய வார்டன், “இந்தா உன்னோட அம்மா லைன்ல இருக்காங்க… பேசு!” என்றபடி ராதாவிடம் மொபைலை நீட்டினாள்.
“அட குண்டுப் பூசணி… அதுக்குள்ளார எங்கம்மா கிட்டேயும் போட்டுக் கொடுத்திட்டியா?” மனசுக்குள் நினைத்துக் கொண்டே போனை வாங்கிக் காதில் வைத்தாள் ராதா.
மறுமுனையில் அவள் தாயின் அழுகை.
“அம்மா… அம்மா… என்னம்மா… ஆச்சு?… ஏம்மா அழறே?” டென்ஷனானாள்.
“ஏண்டி… எங்கேடி போய்த் தொலைஞ்சே?… ஒரு மணி நேரமா நாங்க எல்லோரும் உன் நெம்பருக்கு டிரை பண்ணிட்டேயிருக்கோம்… உன்னோட செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருக்கு!” அழுகையோடு கேட்டாள்.
“அது… வந்து…” என்றபடி வார்டனையும் மற்ற பெண்களையும் பார்த்த ராதா, சட்டென்று, “அதிருக்கட்டும்… என்ன விஷயம்… எதுக்கு ஒரு மணி நேரமா என் நெம்பருக்கு டிரை பண்ணுனீங்க?” கேட்டாள்.
“பாவிப் பெண்ணே… உங்கப்பா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருடி… ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருடி!” சொல்லி விட்டு மறுமுனையில் ராதாவின் தாய் பெரிய குரலில் அழ. மயங்கி விழப் போன ராதாவை வார்டன் என்ற அந்த குண்டுப்பூசணி தாங்கிப் பிடித்தது.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings