in ,

இடம் மாறினால் மனம் மாறும் (சிறுகதை) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பயணத்திற்கு மிகப் பெரிய சக்தி இருக்கிறது. நமக்குள் இருக்கும் நம்மையும் நமக்குத் தெரியாத வேறொரு நம்மையும் கூட நமக்கு உணர்த்துகிறது.

புதிய இடத்தில் புதுப்புது மனிதர்களை சந்திக்கும் பொழுது, அழகழகான சூழலை காணும் பொழுது, மரங்கள் சூழ்ந்து வெளிவரும் பொழுது, அலைகள் சத்தம் காதில் ஒலிக்கும் பொழுது, கற்கள் சிற்பங்களாய் நிற்கும் பொழுது என இப்படியான சூழல்கள் நமக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த தாக்கம் சில சமயங்களில் நல்ல மாற்றத்தை தருகிறது. ஏன் இன்னும் சொல்லப் போனால் தீய பழக்கவழக்கங்களை மறக்கச் செய்து நல்ல மனிதராய் மாற்றுகிறது.

அப்படி வாழ்க்கையை நல்ல முறையில் பயணத்தால் மாற்றிக் கொண்டிருக்கும் மேகலாவின் கணவர் பற்றிய கதை இதோ!

“என்னக்கா வர வர சனி ஞாயிறு ஆனா லீவு போடறீங்க.. என்ன விஷயம்?” தன் வீட்டில் வேலை செய்யும் மேகலாவை பார்த்து கேட்டாள் மகா.

“மீட்டிங் போயிருந்தோம் கண்ணு”

“மீட்டிங்கா.. அது என்னகா.. நீங்களும் மீட்டிங் மீட்டிங்ன்னு சொல்றிங்க.. என்ன மீட்டிங்? எதுக்கு மீட்டிங்?”

“அந்த அண்ணனுக்கு ஒரு மீட்டிங் அதுக்காக போயிர்ந்தோம் மா” அப்படி மேகலா கூறியதும் அதோடு நிறுத்திக் கொண்டாள் மகா

ஒரு வாரம் கழித்து..

“மகா கொஞ்சம் டீ போட்டு கொண்டு வரவா” மேகலா மகாவை கேட்டாள்.

“நான் உங்கள டீயே போட சொல்லலையே, உங்களுக்கு டீ குடிக்கணும் போல இருக்கா. அதான் என்ன கேக்கறீங்களா?” சிரித்துக்கொண்டே கூறினாள் மகா

“காலைல இருந்து தலைவலி தொண்டை கரகரன்னு இருக்கு டீ குடிச்சா பரவலையா இருக்கும் அதான் கேட்டேன் கண்ணு”

“உங்களுக்கு எப்போ டீ வேணுமோ போட்டுக்கோங்க.. நாங்க என்ன சொல்லப் போறோம். இங்க நீங்க வேலை செய்ற மாதிரியா உங்கள நடத்தறோம்”

“இருந்தாலும் ஒரு முறைன்னு ஒன்னு இருக்குல்ல மா”

“பரவால்லக்கா டீ போட்டு குடிக்கிறேன்னு சொல்லிட்டு கூட போட்டுக் குடிங்க”

“சரி கண்ணு”

“உடம்பு முடிலன்றிங்க ஏன் டீ குடிக்கிறீங்க.. சூப் அப்படி எதாவது வேணுமா”

“இல்லை மகா.. டீ குடிச்சே பழகிப் போச்சு. டீயே போட்டுகிறேன்” என்று கூறிக்கொண்டே இரும்பினால் மேகலா

“என்னக்கா இப்படி இரும்பறீங்க..”

“ஆமா மகா.. நேத்து மீட்டிங்க்கு கன்னியாகுமரி போயிருந்தோம்ல அங்க உப்பு தண்ணில குளிச்சோம். அத வேற தெரியாம கொஞ்சம் குடிச்சிட்டேன். இப்போவரை தொண்டைல என்னமோ பண்ணுது.. அதான் இரும்பல்”

“போன வாரம் தஞ்சாவூர்ல மீட்டிங்.. இந்த வாரம் கன்னியாகுமரில மீட்டிங்கா”

“ஆமா மகா. அடுத்த வாரம் திருச்செந்தூர் கூட்டிட்டு போறாங்களாம். அதான் போலாமா வேணாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். பொழப்பயும் பாக்கணும்ல”

“வாரா வாரமா டூர் கூட்டிட்டு போறாங்க.. அப்படி என்னக்கா மீட்டிங்”

“உன்கிட்ட சொல்ல என்ன கண்ணு.. அண்ணா ரொம்ப குடிப்பாருல்ல..” என்று தன் கணவரை பற்றி கூற ஆரம்பித்தாள் மேகலா

“ஆமாம் சொல்லுங்க கா”

“அவருக்கு எங்கெங்கயோ கூட்டிட்டு போய் வைத்தியம் பண்ணோம். கேக்கல.. கோவிலுக்கு கூட்டிட்டு போனோம் கேக்கல.. என்ன முயற்சி பண்ணாலும் ஒன்னும் கேக்கல.. மறுப்படியும் ஒரு வாரத்துல குடிக்க ஆரம்பிச்சிடுவாரு.. எனக்கோ மூணு பிள்ளைங்க இருக்கு. நான் எப்படி கண்ணு பாத்துக்குவேன்.. அப்புறம் தான் இந்த சங்கத்தை பத்தி கேள்விபட்டேன்”

“என்ன சங்கம் கா”

“குடிக்கிறவங்களாம் அந்த சங்கத்துல இருக்காங்க.. மீட்டிங் நடத்துவாங்கன்னு சொன்னாங்க.. இது என்னடா இதுக்கெல்லாம் சங்கமான்னு நினைச்சேன். அங்க போய் நிறைய பேர் மாறிட்டாங்கன்னு சொன்னாங்க.. அதான் நானும் என் வீட்டுக்காரர அங்க கூட்டிட்டு போனேன்”

“அங்க என்ன பண்ணாங்க கா”

“குடிக்கிறவங்கள வார வாரம் டூர் கூட்டிட்டு போறாங்க.. செலவெல்லாம் அவங்களே.. பஸ்க்கு ரூம்க்கு சாப்பாட்டுக்கு எல்லாம். அது தவிர வேற எதாவது வாங்கணும்னா நம்மை காசு போட்டு வாங்கிக்கலாம்”

“என்னது டூர் கூட்டிட்டு போறாங்களா.. என்னக்கா.. இதுல எப்படி மாறுவாங்க”

“அப்படிதான் நானும் நினைச்சேன் மகா. அப்புறம் டூர் தானன்னு போய் பாக்கலாம்னு போனேன். சிதம்பரம் கூட்டிட்டு போனாங்க. போய்ட்டு அங்க சாமியெல்லாம் கும்புட்டு சாயங்காலாம் அஞ்சு மணிக்கு பிள்ளைங்கள ரூம்ல விட்டுட்டு நாங்க மட்டும் மீட்டிங் போணும். அங்க குடிக்க கூடாது நல்ல படியா இருக்கணும்னு பேசுறாங்க. ஏற்கனவே குடிச்சிட்டு இருந்தவங்க மனசு மாறி எப்படி குடும்பம் நடத்தறோம் குடிக்கும் போது என்னலாம் இழந்தோம் குடிக்கமா இருக்கும் போது எப்படி வாழ்க்கை மாறிச்சின்னு சொல்றாங்க.. கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறுது அவருக்கு”

“அப்போ அண்ணா இப்போ மாறிட்டாரா அக்கா”

“முழுசா மாறிட்டாருன்னு சொல்ல முடியாது. ஆனா பரவால்ல “

“சாயங்காலம் ஆனாவே வீட்ல இருந்தா அவருக்கு அந்த நினைப்பு வரும். இப்போ கோவில் அங்க இங்கன்னு வெளிய போய்டுறதுனால அவரு அத மறந்துடறாரு. ஒழுங்கா வேலை பாக்கறாரு.. பிள்ளைங்களோட சந்தோசமா இருக்காரு”

“பரவால்ல கா”

“ஆமா கண்ணு. முன்ன இருந்ததுக்கு அவரு இப்போ எவ்வளவோ மாறிட்டாரு. எப்பாவது வீட்டில இருக்கும் போது அந்த எண்ணம் வருது. அதான் இன்னும் மீட்டிங் போய்ட்டு இருக்கேன். அவரு முழுசா மாறிடுவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு மகா”

“உங்க மனசுக்கு நிச்சயம் மாறிடுவாரு கா”

“மாறுனா சந்தோசம் தான் கண்ணு.. அப்புறம் ஒன்னு கேக்கணும்”

“அடுத்த வாரம் வால்பாறை கூட்டிட்டு போறாங்களாம். நான் இன்னும் அங்கலாம் போனதே இல்லை.. சனி ஞாயிறு லீவு கிடைக்குமா” என்று மேகலா கேட்க, இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்யாணமாம் கல்யாணம் (சிறுகதை) – சுஶ்ரீ

    கணவர் இருக்க பயமேன்? (சிறுகதை) – சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்