in ,

என்ன சொல்லப் போகிறாய் ❤ (சிறுகதை) – மலர் மைந்தன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில்  புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

“நெற்றி வகிட்டில் குங்குமம் இல்ல…. கழுத்துல தாலியில்ல… கால்ல மெட்டியில்ல…. ஆளப் பாத்தா 35 தாண்டுன மாதிரியிருக்கு…. இன்னுமா கல்யாணம் ஆகாதிருக்கும்?” என்று நடராஜன் தன் நண்பன் சுந்தரேசன்கிட்ட சொன்னான்.

சுந்தரேசன்: “மச்சீ…. இப்பல்லாம் பல பொண்ணுங்க 30 தாண்டியும் கல்யாணம் ஆகாதிருக்காங்க….உனக்கு புடுச்சிருந்தா நேரா போய் பேசு”

திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் கண்காணிப்பாளர்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் பேசிக் கொண்டிருப்பது ரம்யாவைப் பற்றித் தான்.

நடராஜனுக்கு 35 தாண்டியும் கல்யாணமாகல….அவன் வீட்டுல… ‘நீ யார வேணுன்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ …எங்களுக்கு சாதி, மதம் பேதமில்ல ….முடிஞ்சா காதல் பண்ணியாவது கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொல்லி விட்டனர்.

நடராஜனுக்கு ரம்யாவை பிடித்திருந்தது. எதனால..?..தெரியல…..இப்பதான் குரு பலம் கூடியிருக்குமா என்னவோ? அவனும் ரம்யாவின் கண்களில் படும்படி நடமாடிக் கொண்டிருந்தான். இதையெல்லாம் ரம்யா கவனிக்கத் தவறவில்லை ….ரம்யா கூடவே இருக்கும் தீபாவும் கவனிக்கத் தவறவில்லை…

தீபா: “என்னடி ரம்யா ….நடராஜன் சார் …உன் முன்னாடியே நடனமாடுகிறார் ….உன்மேல ஒரு கண்ணு போல …?”

“ஏய் …சும்மா இருடி ….நீ வேற…”

“ம்…ம்…நடக்கட்டும் நடக்கட்டும்….”

ஒரு திங்கட்கிழமை

ரம்யாவிடம் நடராஜன் …..“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…”

“என்ன பேசணும் …?”

“நேரடியாவே சொல்றேன்…..உங்கள பிடிச்சிருக்கு… நீங்க சரின்னு சொன்னா வீட்டுக்கு வந்து முறைப்படி பொண்ணு கேட்குறேன்…?’”

“வர ஞாயிற்றுகிழமை வீட்டுக்கு வாங்களேன் …. பேசலாம்…?”

எதோ விண்வெளிக்குச் சென்று செவ்வாய் கிரகத்தில் கால்வைத்தது போன்று மகிழ்ச்சியில் துள்ளிய நடராஜன். திங்கள் முதல் சனி வரை நாட்கள் நகர்வது நரக வேதனையாக இருந்தது. ‘நேரம் ஏன் இவ்வளவு மெதுவா போகுது’ன்னு நொந்துக் கொண்டான்.

ஞாயிறும் வந்தது ….நடராஜனும் ரம்யா வீட்டிற்கு வந்துச் சேர்ந்தான் ….வரவேற்று அமரச் சொல்லிய ரம்யா காபி கலக்க சமையலை நோக்கி நகர்ந்தாள்.

‘வீட்டில் வந்து பேசுங்கள் என்றாள்…இங்க யாரையும் காணோம்’ என்று நடராஜன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே …காபியோடு ரம்யா வந்தாள்…அதே நேரத்தில் …நான்காவது அல்லது ஐந்தாவது படிக்கும் வயதில் ஒரு பெண் குழந்தை வீட்டுக்குள் நுழைந்தது.

நடராஜன்: “இது யாரு…?பக்கத்து வீட்டு குழந்தையா? வீட்டுல யாரையுமே காணோம்?”

“இது என் குழந்தை ….நாங்க ரெண்டுபேரும் தான் இங்க இருக்கோம்… வேறு யாருமில்ல….. என் காதல் கணவன் குடிக்கு அடிமையாகி விபத்தில் போய்ச் சேர்ந்து விட்டான்…. எங்களை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்களால் தனித்து இருக்கிறோம் ….வாழ்க்கை வாழணுமே!”

 “இப்ப என்ன சொல்லப் போகிறாய்?” என்பது போல நடராஜனின் கண்களைக் கூர்ந்து பார்த்தாள் ரம்யா.

பதிலேதும் சொல்லாமல் நடையைக் கட்டினான். ஒருவாரமாக வேலைக்கு வரவில்லை நடராஜன்.

தீபா: “ரம்யா…. நடராஜன் சாரை ஒரு வாரமா காணோம்? ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தாரா? என்ன சொன்ன?”

“உண்மையைச் சொன்னேன்…..பயந்து ஊரை விட்டே ஓடிட்டார் போல” என்று சொல்லி சிரிக்க, எதிரில் வந்து நின்றான் நடராஜன்.

“ரம்யா….பதிவு திருமணத்துக்கு …அசல் ஆதார் அட்டை வேணுன்னு சொல்லிட்டாங்க, அதான் கிராமத்துக்கு போயிட்டு எடுத்துவர நாளாகிடுச்சு …நாளைக்கு வரும்போது உன் ஆதார் அட்டை எடுத்துட்டு வா ….விண்ணப்பம் பதிவு செய்யனும்….”

“இப்ப என்ன சொல்லப் போகிறாய்?” என்று நடராஜன் கேட்பது போல் இருந்தது ரம்யாவிற்கு.

“அப்புறம் …. வெள்ளிக்கிழமை நல்லநாள்” என்று சொல்லி முடித்தவன் …தீபாவிடம் திரும்பி, ”உங்க ஆதார் அட்டையும் எடுத்துட்டு வாங்க…..சாட்சி கையெழுத்து போடுறவங்க ஆதார் அட்டையும் வேணுமாம்”.

வெள்ளிக்கிழமையின் விடியலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள் ரம்யா….மனதளவில்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டாக்டர் சதீஷ் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 6) – ராஜேஸ்வரி