in ,

எதையோ நினைச்சு… எதுவோ ஆச்சு! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

முரளி  சொல்லச் சொல்ல எனக்கு எரிச்சலாயிருந்தது.  ஆனாலும் அடக்கிக் கொண்டு, “உண்]மையிலேயே நீ அதிர்ஷ்டசாலிடா*” என்றேன் ஒப்புக்கு.

ஆனால் மனசுக்குள் “இவனைவிட கலரும் நான்தான்… பர்ஸனாலிட்டியும் நாந்தான்… அப்படியிருக்கும் போது அந்தக் கல்பனா என்னைய விட்டுட்டு எப்படி இவனை செலக்ட் பண்ணி இவன்கிட்டே ப்ரபோஸ் பண்ணியிருக்கா?” யோசித்தேன்.

 “தீபக் அவ சொல்றா… நான் ஷேவிங் பண்ணி ட்ரிம்மா இருக்கறதை விட இப்படி தாடியோட இருக்கறதுதான் நல்லாயிருக்காம்”

“க்கும்… அழகு வழியுது..” என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன், “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வித ரசனைடா… சில பேருக்கு “மொழு…மொழு”ன்னு ஷேவிங் பண்ணிக்கற ஆண்களைத்தான் பிடிக்கும் சில பேருக்கு இப்படி!… எனி வே… என்னோட வாழ்த்துக்கள்”

“டேய்… தீபக்… இந்த சந்தோஷத்தைக் கொண்டாடணும்டா…. எப்போ…எப்படி…ங்கறதை நாளைக்கு காலைல நானே போன் பண்ணி சொல்றேன்” என்ற முரளி தன் பல்ஸரை  வேகமாக  உதைத்துப் பறந்தான்.

“அட தேவுடா… சும்மாவே இவன் விடற பந்தா தாங்க முடியாது… இப்ப ஒரு ஃபிகரு வேற இவனை லவ் பண்றேன்னு சொல்லிடுச்சு!… போச்சு… இனி இவனுக்கு தலை கால் புரியாது” அந்த விநாடியில் சாத்தான் ஒன்று என் மனசுக்குள் நுழைய, பற்களை “நற…நற”வென்று கடித்துக் கொண்டு நம்பியாராகித் திட்டம் போட்டேன்.

 “கரெக்ட்.. அப்படியே செய்திட வேண்டியதுதான்!… இன்னிக்கே அவ மொபைலுக்குக் கால் பண்ணி… இந்த முரளியைப் பற்றி இல்லாததையும்.. பொல்லாததையும் சொல்லி… அவங்க காதலை முளையிலேயே கிள்ளிடணும்!… ஹா….ஹா…ஹா… எனக்குக் கிடைக்காத கல்பனா இவனுக்கும் கிடைக்கக் கூடாது!..” கல்பனா மொபைலுக்கு கால் செய்தேன்.

“ஹல்லோ… கல்பனா?”

“யெஸ்”

“ஹாய்..  நான் தீபக்… முரளியோட ஃப்ரெண்ட்…” என்றேன் வெகு சிநேகமாக.

“ஹாய்… என்ன திடீர்னு… எனக்குக் கால் பண்ணியிருக்கீங்க?”

“அது… வந்து…… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்… அதான்…” இழுத்தேன்.

“ம்… சொல்லுங்க தீபக்”

“என்னோட நண்பனைப் பத்தி நானே மோசமா சொல்லக்கூடாதுதான்… இருந்தாலும்… ஒரு பொண்ணோட வாழ்க்கை… அதாவது உங்களோட வாழ்க்கை… வீணாய்ப் போயிடக் கூடாதுங்கற அக்கறைல என்னோட மனசைக் கல்லாக்கிக்கிட்டு சொல்றேன்… வந்து… வந்து.. முரளி… அத்தனை நல்லவனில்லை*…”

“தீபக்… எதை வெச்சு அப்படி சொல்றீங்க?…  எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க*” அவள்  பேச்சில் திடீரென்று  சீரியஸ்னஸ் தெரிய,  எனக்குள்  உற்சாகம்  வந்தது.

“அவன் ஒரு டிரக் அடிக்ட் .. அதாவது போதை மருந்துக்கு அடிமை”

“என்ன  சொல்றீங்க?” அதிர்ந்தவளாய் அவள் கத்த,

“ஆஹா..” குஷியானேன்.  “யெஸ் கல்பனா.. போதை மாத்திரை இல்லாம அவனால இருக்கவே முடியாது…. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் அவனைத் திருத்த என்னால முடியல… உண்மையச் சொல்லனுன்னா.. இப்ப அவன் எல்லை மீறிப் போயிட்டான்… இனி அவனை அந்த ஆண்டவனால கூடக் காப்பாத்த முடியாது”

எதிர்முனை நீண்ட அமைதி காத்தது. “ஹய்யா… என்னோட திட்டம் நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது! பொண்ணு நம்ப ஆரம்பிச்சுட்டா.. அடேய்… முரளி என்]கிற முட்டாப்பயலே உன்னோட காதல்… இன்னியோட பணால்*” மனசு குதித்தது.

“ஓ.கே… தீபக்*  என்கிட்ட இந்த  உண்மையை  மறைக்காமச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி*” ‘கர…கர’த்த கல்பனாவின் குரல் அவள் அழுததை எனக்கு உணர்த்த,

“வந்து… நான்தான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொன்னேன்னு அவனுக்குத் தெரிய வேண்டாம்

“நோ…நோ…கண்டிப்பா இதைப் பத்தி முரளிகிட்ட நான் மூச்சு விட மாட்டேன்” அவள் உறுதியாகச் சொல்ல, இணைப்பிலிருந்து வெளியேறினேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, முரளி-கல்பனா காதல் எக்ஸ்பிரஸ் முன்னை விடச் சிறப்பாய் இயங்க, எனக்குள் குழப்பம் வளர்ந்தது. “என்னடா இது வம்பாயிருக்கு?…. போதை மாத்திரைக்கு அடிமையான ஒருத்தனை எந்தப் பொண்ணும் சீந்த மாட்டாள்ன்னு நெனச்சேன்!… ஆனா இங்க என்னடான்னா… எல்லாமே தலை கீழா நடக்கு”

 “தீபக்… ஈவினிங் கல்பனாவை அசோகா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல மீட் பண்ணப் போறேன்… நீயும் என்கூட வர்றே!… இன்னிக்கு அவ பர்த் டே!… காம்ப்ளக்ஸ் ரெஸ்டாரெண்டில் டிரீட் தரப் போறா… உன்னைக் கண்டிப்பாக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கா” என்றான் முரளி.

      எனக்கு திக்கென்றிருந்தது.  “என்னை எதுக்கு வரச் சொல்லியிருக்கா?… ஒருவேளை அங்க வெச்சு என்னை முரளி கிட்ட மாட்டி விடப் போறாளோ?… ம்ஹூம்… சிக்கக் கூடாது!… எப்படியாவது தட்டிக் கழிச்சிடணும்”

 “அது… வந்து… முரளி… நாளைக்கு…” என்னைப் பேச விடாமல் தன் கையால் என் வாயைப் பொத்திய முரளி, “ம்ஹும்… நீ எதுவும் பேசக் கூடாது!.. வர்றே… அவ்வளவுதான்”

தர்மசங்கடமாய் சம்மதித்தேன்.

மாலை.   ரெஸ்டாரெண்டில் முரளி கை கழுவப் போயிருந்த சமயம் கல்பனா என்னிடம் அவசர அவசரமாய்ப் பேசினாள்.

 “தீபக் நீங்க அன்னிக்கு என்ன சொன்னீங்க?… இந்த முரளிய இனிமே ஆண்டவனால் கூடக் காப்பாத்த முடியாதுன்னு தானே சொன்னீங்க?… அந்த நிமிஷமே நான் முடிவு பண்ணிட்டேன்!… எப்படியாவது முரளியையே கல்யாணம் பண்ணிக்கிட்டு…அந்த போதை அரக்கனிடமிருந்து அவரைக் காப்பாத்தியே தீரணும்னு… ”

நான்  “திரு…திரு”வென்று விழித்தேன்.

 “அதனாலதான் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவர் கூட நெருங்கிப் பழக் ஆரம்பிச்சேன்!… என் கூட இருக்கற நேரங்கள்ல அவருக்கு அந்த போதை வஸ்துக்களோட ஞாபகமே வர்றதில்லை!… அதனால வாழ்க்கை முழுவதும் அவர் கூடவே நான் இருந்தா அவர் நிச்சயம் திருந்திடுவார்ன்னு நான் நம்பறேன் தீபக்”

தலையில் சம்மட்டியால் ஓங்கியடித்தது போலிருந்தது எனக்கு.  “ஆஹா… கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரி”ன்னு சொல்லுவாங்களே.. அது இதுதானா?”

 “என்ன தீபக்… அமைதியாயிட்டீங்க?… என்னோட முடிவு சரிதானே?… ஒரு நல்லவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சராசரியா வாழ்றதை விட ஒரு கெட்டவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு.. அவனைத் திருத்தறதில்தான் ஒரு சேலஞ்ச் இருக்கு!… என்ன சொல்றீங்க?”

என் வாய் என்னையறியாமல் “ஆமாம்” என்றது.  வேற வழி?

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (நாவல் – அத்தியாயம் 21) – தி.வள்ளி, திருநெல்வேலி

    பழைய பாட்டியும் புதிய தீபாவளியும் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்