2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்க, சமையலறையிலிருந்து புடவைத் தலைப்பில் கைகளைத் துடைத்தபடியே வந்து பார்த்தேன்.
தேங்காய் மண்டி தங்கவேலு.
செய்தித் தாளில் மூழ்கிக் கிடந்த என் கணவரிடம், “ஏங்க! தேங்கா மண்டிக்காரரு” சொல்லி விட்டு மீண்டும் சமையலறைக்குள் புகுந்தேன். அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. அதற்குப் போட்டியாய் என் மன உலையும் கொதித்துக் கொண்டிருந்தது. “ச்சே! என்ன மனுசன் இவரு? வீட்டுத் தென்னை மரத்துல காய்க்கற காய்கள்ல நம்ம வீட்டு உபயோகத்துக்குன்னு கொஞ்சம் எடுத்து வெச்சிட்டு, மீதிய வித்தா அதுல ஒரு அர்த்தம் இருக்கு! மண்டிக்காரனைக் கூப்பிட்டு மொத்தத்தையும் அவனுக்கே வித்தா என்ன அர்த்தம்?… வீட்டு உபயோகத்துக்கு வெளிய போயல்ல வாங்க வேண்டியிருக்கு”
“ம்மா… மொத்தம் எழுவத்தியஞ்சு தேங்காய் விழுந்திருக்கு… அப்பா அத்தனையையும் அந்த மண்டிக்காரனுக்கே குடுக்கறார்” மகன் சொல்ல,
“தெரிஞ்சதுதானே?” என்றேன் சலிப்புடன்.
“போய்க் கேளும்மா, “வீட்டு உபயோகத்துக்குக் கொஞ்சம் வேணும்னு கேளும்மா” மகன் உசுப்பி விட, ஒரு குருட்டு தைரியத்தில் சென்று, கேட்டே விட்டேன்.
“ஏண்டி… ஒவ்வொரு தடவையும் போதும் உன் கூட இது ஒரு ரோதனையாப் போச்ச… முடியாதுடி! வீட்டு உபயோகத்துக்கு வேணும்னா வெளிய வாங்கிக்க! அவ்வளவுதான்! ” கறாராய்ச் சொல்லி விட்டு அவர் திரும்ப,
“அது செரி! வெளிய கொஞ்சத்த வெலையா விக்குது? யானை வெலை! குதிரை வெலையல்ல விக்குது?… அதுக்கு இதுகளை வெச்சுக்கறதுதானே லாபம், புத்திசாலித்தனம்? இந்தச் சின்னக் கணக்கு கூட ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது?”
“ஏய்… என்னடி பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? போடி… போய் சமையல் வேலைய மட்டும் பாரு” அவர் கை சமையலறையைக் காட்டியது.
“ஹும்! நஷ்டத்துக்குப் பிடிவாதம் பிடிக்கற மனுசன்கிட்ட பேசிப் பிரயோஜனமென்ன?” முணுமுணுத்தவாறே சமையலறையை நோக்கி நடந்தேன். என் பின்னாடியே வந்த முருகன், “ம்மா! அப்பா ஏம்மா இப்படி இருக்கார்?”
“டேய்! இது இன்னிக்கு நேத்தாடா நடக்குது? நான் இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த நாள்லேயிருந்து இப்படித்தான் நடக்குது, நானும் ஒவ்வொரு தடவையும் கேட்பேன், கேட்டு அவர்கிட்ட வாங்கிக் கட்டிட்டு அடங்கிப் போய்டுவேன்”
“ம்மா! இத்தனை நாளா இது என்னைக் கோபப்படுத்தற ஒரு விஷயமாத்தான் இருந்தது! ஆனா இப்பத்தான் புரிய வருது! இது கோபப்படற விஷயமில்லை, யோசிக்கப்பட வேண்டிய விஷயம், நிச்சயம் இதுக்குப் பின்னாடி ஏதோ மர்மம் இருக்கணும்! ஏன்னா? இந்த வியாபாரம் நமக்கு நஷ்டம்தான்னு தெரிஞ்சும் செய்யறார்ன்னா, யோசிக்கணும்! அவருகிட்ட விசாரிக்கணும்”
“அது செரி, இது சம்மந்தமா பேச்செடுத்தாலே கொதிக்கற சிமெண்ட்டுத் தரைல வெறும் காலோட நிக்கற குழந்தை குதிக்கும் பாரு? அது மாதிரியல்ல குதிக்கறாரு மனுசன், அப்புறம் எங்க போய் அவருகிட்ட மர்மத்தைக் கேக்கறது?”
அப்போது என் மூளைக்குள் சட்டென ஒரு ஃப்ளாஷ் அடித்தது. “டேய்… முருகா…வேணா இப்படிச் செஞ்சு பாரேண்டா! ம்ம்ம்… நம்ம வெங்கி மாமா இருக்காரில்ல? அவரு நம்ம அப்பாவோட பால்ய கால நண்பர், ரெண்டு பேரும் கிட்டத்தட்ட முப்பது, முப்பத்தியஞ்சு வருஷமா அதே நட்போட தினமும் சந்திச்சு மணிக்கணக்காப் பேசிட்டிருக்காங்க! எனக்கென்னமோ இந்தத் தேங்காய் வியாபாரத்துக்குப் பின்னாடி இருக்கற மர்மம், அவருக்குத் தெரியுமோன்னு தோணுது”
“கரெக்ட்ம்மா! நான் அவருகிட்ட விசாரிச்சுப் பார்க்கறேன்” சொல்லிவிட்டு முருகன் செல்ல,
“டேய்… ஜாக்கிரதைடா! இதிலிருந்து ஏதாச்சும் புதுப் பிரச்சினை கிளம்பிடப் போகுது” கத்தினேன். என் பயம் எனக்கு.
மாலை ஆறு மணியிருக்கும், முறத்தில் அரிசியைப் போட்டு கற்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன். காலில் செருப்பை மாட்டியபடி என் பக்கம் திரும்பிய என் கணவர், “சாவித்திரி! நான் வெங்கி வீட்டு வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்க, எனக்கு பகீரென்றது. “அய்யய்யோ! இந்த முருகன் வேற வெங்கி மாமாவைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன்னுட்டுப் போயிருக்கானே? இவரு போற நேரத்துல அவனும் அங்க இருந்திட்டான்னா பெரிய விவகாரமாய்டுமே!” நெருப்பின் மேல் நிற்பவளைப் போல் தவித்துக் கொண்டிருந்த என்னை ஆறுதல் படுத்துவது போல் வீட்டிற்குள் நுழைந்தான் முருகன்.
“வந்திட்டியா? நல்ல வேளை! இப்பத்தான் அப்பா வெங்கி மாமா வீட்டை நோக்கிப் போய்க்கிட்டிருக்கார்”
“தெரியும்மா! இந்த நேரத்துக்கு அவர் அங்க வருவார்ன்னு தெரிஞ்சுதான் நான் முந்தியே போய் வெங்கி மாமாவைச் சந்திச்சுப் பேசிட்டு வர்றேன்”
“என்னாச்சு? ஏதாச்சும் தெரிஞ்சுதா?” ஒரு ஆர்வத்துடன் கேட்டேன்.
“தெரிஞ்சதும்மா! ஆனா அது தெரிஞ்ச பிறகு அப்பா மேல இருந்த கோபம் போயி, மதிப்பும், மரியாதையும், இன்னும் அதிகமாயிடுச்சும்மா! அவரு செய்யுற இந்த தேங்காய் வியாபாரம் ஒரு வியாபாரம் இல்லேம்மா! விரதம்மா…விரதம்!”
“என்னடா சொல்றே? விரதமா?”
“ஆமாம்மா! அப்பா சின்ன வயசா இருந்தப்ப ரொம்ப ரொம்ப ஆசையா ஒரு நாய் வளர்த்துட்டு வந்தாராம், அதுக்கு சாப்பாடு வைக்கறது, குளிக்க வைக்கறது, எல்லாமே அவர்தானாம்! அவரு சாப்பிடறாரோ இல்லையோ அதுக்கு மொதல்ல சாப்பாடு வைச்சிடுவாராம், தூங்கறப்பக் கூட அவரோட கட்டிலுக்குக் கீழதான் அது படுத்துக்குமாம்! அவரு பள்ளிக்கூடம் போகறப்ப இதுவும் கூடவே போய், சாயந்திரம் வரைக்கும் பள்ளிக்கூட வாசல்லேயே படுத்துக் கெடக்குமாம், அவரு திரும்பி வரும் போதுதான் கூட வருமாம்”
“சரிடா! அதுக்கும் இந்தத் தேங்காய்க்கும் என்னடா சம்மந்தம்?” நான் பொறுமையிழந்து இடை புகுந்தேன்.
“இருக்கும்மா! சம்மந்தம் இருக்கு! அந்தக் காலத்துல இந்தத் தென்னை மரம் சரியான வளர்ச்சியில்லாம காய் பிடிக்க வேண்டிய காலத்துல காய் பிடிக்காம ஒரு நோஞ்சான் மரமா இருந்திச்சாம், அப்ப நம்ம அப்பாவோட அப்பா, அதான் என்னோட அருமைத் தாத்தா, ஒரு விவசாயக் கல்லூரி ஆளைக் கூட்டிட்டு வந்து காட்டினாராம்! அந்த ஆளு, “மரத்துக்கு அடில நல்லா ஆழமாக் குழி தோண்டி….அதுல ஒரு செத்த நாயைப் பொதைச்சிடுங்க! அதுதான் சரியான உரம்! அந்தச் சத்து வேர் வழியாப் பாய்ஞ்சு, மரம் செழிப்பாயிடும்”ன்னானாம்”
எனக்கு லேசாய் புரிபட ஆரம்பிக்க, தலையை மேலும் கீழுமாய் ஆட்டினேன்.
“அவன் பாட்டுக்குச் சொல்லிட்டுப் போயிட்டான்! அதைக் கேட்டு நம்ம தாத்தா என்ன பண்ணியிருக்காரு, அப்பா ஆசையா வளர்த்திட்டு வந்த அந்த நாயை அப்பாவுக்கே தெரியாம அடிச்சுக் கொன்னு அதை இந்தத் தென்னை மரத்துக்கு அடில பொதைச்சிட்டாராம்! அத்தோட இல்லாம அப்பாகிட்ட அது எங்கியோ காணாமப் போயிடுச்சுன்னும் சொல்லிட்டாராம், ஆனா…கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அந்த விஷயம் எப்படியோ அப்பாவுக்குத் தெரிஞ்சு போச்சாம்! அது அவருக்குத் தெரிய வரும் போது தாத்தா உயிரோடவே இல்லையாம்”
நான் அவன் முகத்தையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். மனதிற்குள் இனம் புரியாத ஒரு வேதனை லேசாய்த் துளிர் விட ஆரம்பித்தது.
முருகன் தொடர்ந்தான்.
“அந்தத் தென்னை மரமும் அதுக்கப்புறம் செழிப்பாகி, காய் பிடிக்க ஆரம்பிச்சிட்டுதாம்! தான் ஆசையாய் வளர்த்த நாயோட ரத்தத்தையும், சதையையும், உறிஞ்சி வளர்ந்த அந்த மரத்தோட காய்களை சாப்பிட்டா அது மனதை உறுத்தும் என்பதாலேயே அப்பா அதை இன்று வரை சாப்பிடாம வித்துடறாராம்! தான் மட்டுமல்லாது தன் குடும்பத்தாரும் அதைச் சாப்பிடுவது ஏனோ மனசுக்குப் பிடிக்கலைன்னுதான் நம்மையும் சாப்பிட விடறதில்லையாம்”
கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மனசு கனத்துப் போனது. “ச்சே…இந்தப் பாறை மனுசனுக்குள்ளார இப்படியொரு பஞ்சு மனசா?”
இரவு எட்டு மணி வாக்கில் வீடு திரும்பிய என் கணவரை மானசீகமாக வணங்கினேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings