எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சென்னை மெரினா பீச்சில் ஒரு முதியவர் சுமார் 75 வயதிற்கு மேல் இருக்கும், ஒரு கையில் ஒரு பெரிய டிபன் கேரியர் போன்று நான்கு அடுக்குகள் இருந்தது. தோளில் தண்ணீர் பாக்கெட்டுக்குள் கொண்ட ஒரு பெரிய பை இருந்தது, கூடவே மற்றொரு கையில் இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் அதில் ஒன்றில் பேப்பர் கப்புகள் மற்றொன்று காலியாக வைத்திருந்தார்.
நான் அவரை கூப்பிட்டு ” பெரியவரே என்ன விற்பனை செய்கீறீர்கள்?” என்றேன்.
அவர் அனைத்தையும் ஒவ்வொன்றாக கீழே வைத்துவிட்டு, அந்த நான்கு அடுக்குகள் கொண்ட டிபன் கேரியரை திறந்தார். ‘அதில் ஒன்றில் பட்டாணி சுண்டல், இரண்டாவதில் கை முறுக்கு, மூன்றாவதில் வேக வைத்த தோல் உரித்த மசாலா வேற்கடலை, நான்காவதில் தேங்காய் போளி இருந்தது’
எதற்காக..? “இவ்வளவு பெரிய டிபன் கேரியரை வயதான காலத்தில் சுமந்து வந்து விற்பனை செய்கிறீர்கள்?” உங்க பசங்க யாரும் இல்லையா..? என்றேன்..!
“தம்பி எனக்கு ஒரே பையன், நல்லா படிக்க வச்சேன் , நல்லாவே படிச்சான். வெளிநாட்டில் வேலைக்கு போனவன், அங்கே யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, அங்கேயே செட்டிலாயிட்டான். இங்கே வர்தே இல்லை, பணமும் அனுப்பறதில்ல. நானும், என் மனைவியும் சாப்பிடணும், மருந்து வாங்கணும், வீட்டுக்கு வாடகை கொடுக்கணும், மத்த செலவுகளுக்கும் பணம் வேணுமே, எனக்கு வேற வருமானம் எதுவும் இல்லை, என்ன பண்றது..?” அதான் இந்த மாதிரி”. “கை, கால் நல்லா இருக்கிற வரை உழைப்போம் அப்புறம் ஆண்டவன் விட்ட வழி என்று மன வருத்தத்துடன்” கூறினார்.
தம்பி, இங்க விற்பனை செய்பவர்கள் எல்லாரும் சிறுவர்கள், வாலிபர்கள், ஒரு தின் பண்டம் மட்டுமே தான் விற்பார்கள்”.
ஏனெனில் அவர்களால் பல முறை நடந்து, நடந்து, சென்று விற்க முடியும். ஆனால் நான் வயதானவன், என்னால் ரொம்ப தூரம் நடந்து சென்று விற்க முடியாது. அதனால் நாலு விதமான தின் பண்டங்களை வைத்திருப்பதால் வாங்குபவர்கள் ருசி பார்க்க வேண்டி, நாலையும் வாங்குகிறார்கள். கூடவே தண்ணீர் பாக்கெட்டும் விற்பதால், அவர்களுக்கு ஒரு ஓட்டலில் சாப்பிடும் எண்ணம் தோன்றுகிறது போல. எனக்கும் விரைவில் விற்பனை செய்து விட்டு வீடு போய் சேருவேன் என்று சொல்லி முடித்தார்.
அது சரி.., “காலி பக்கெட் எதற்கு?” என்றேன்.
“நமக்கு சோறு போடும் இந்த பீச்சையும், மணலையும் அசுத்த படுத்தலாமா..? தவறில்லையா..? “
“எனவே நான் அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்து, சாப்பிட்ட காலி பேப்பர் கப், தண்ணீர் பாக்கெட்டை இந்த காலி பக்கெட்டில் போடச் சொல்லுவேன். ஒரு நாளைக்கு சுமார் 100 பேப்பர் கப்பும், தண்ணி பாக்கெட்டும் சேரும். ஏதோ நம்மால் முடிந்த அளவிற்கு சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் அல்லவா ..?” என்று கூறி விட்டு
“இதிலும் ஒருத்தருக்கு உபகாரம் செய்த மனதிருப்தி இருக்குது தம்பி என்றார்”.
நான் ஆச்சரியத்துடன் “உபகாரமா..?” அது எப்படி என்றேன்.
“இந்த காலி பக்கெட்டில் சேரும் இவற்றை வீட்டில் சேர்த்து வைப்பேன், மாதம் ஒரு முறை, எங்கள் வீட்டிற்கு உடல் ஊனமுற்ற ஒருவர் வந்து வாங்கிச் செல்வார். அவரிடம் பணம் வாங்க மாட்டேன், அது தான் அவருக்கு, என்னால் முடிந்த உபகாரம்” என்று பேசி முடித்தார் பெரியவர்.
“நானும் அந்த நான்கையும் வாங்கி சுவைத்தேன், அருமையாக இருந்தது’. “நாலு அயிட்டங்களையும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்து, காலி பேப்பர் கப்பையும், தண்ணீர் பாக்கெட்டையும் அந்த பக்கெட்டில் போடச் செல்லி வாங்கி சென்றார் அந்த பெரியவர்”.
‘அவரின் வயது , விற்பனை சாதுர்யம், சுற்றுச்சூழல் அக்கறை, மன தைரியம், உதவி மனப்பான்மை, இவற்றை பார்த்த எனக்கு’, ‘இந்த காலத்து ஒரு சில இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களை மறந்து பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வெளிநாட்டு வேலை, அரசாங்க வேலை, தனியார் வேலை என்று வேறு, வேறு ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தேடி ஒடுவதை நினைத்துப் பார்க்க, வேதனை தான் வந்தது’.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings